
உலகப்புகழ்பெற்ற ஹாரி பாட்டர் நாவலின் எழுத்தாளரான ஜே. கே. ரவுலிங், தனது பெயரில் ஒரு புதிய நிதி அமைப்பைத் தொடங்கியுள்ளார். பெண்களுடைய பாலினம் சார்ந்த உரிமைகளுக்கு சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள ஏதுவாக, தனி நபர் அல்லது அமைப்புகள் இந்த நிதியைப் பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜே.கே. ரவுலிங் ஸ்காட்லாந்தில் வாழும் பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.
அவருடைய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், (J.K. Rowling Women’s Fund – JKRWF) ‘பணியிடத்திலும், பொது வாழ்விலும், பெண்களது பாலின அடிப்படையிலான உரிமைகளைத் தக்கவைக்கப் போராடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதியுதவி, சட்ட முன்னுதாரணங்களை உருவாக்கி, கொள்கை மாற்றத்துக்கு வழிவகுக்கும் மற்றும் பெண்களின் எதிர்கால வாழ்வில் முன்னேற்றத்துக்கான பங்களிப்புகளை இந்த நிதி அமைப்பு வழங்கும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்தை இழந்த பெண்கள் முதல், பெண்கள் என்ற காரணத்தினால் நியாயமற்ற கொள்கைகளை சந்தித்திவர்கள், பெண்களது உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கு எதிரான பிரச்னைகளை சந்திப்பவர்கள் உள்ளிட்ட பாலினம் சார்ந்த பிரச்னைகளை சந்திக்கிற பெண்கள், இதற்கான சட்டப்போராட்டங்களை மேற்கொள்ளும்போது இந்த நிதி அமைப்பில் உதவிக்கோரி விண்ணப்பிக்கலாம். இந்த நிதிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜக்கிய ராஜ்ஜியம் (UK ) அல்லது அயர்லாந்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ வலைதளத்தின் இறுதியில் உள்ள படிவத்தை நிரப்பும் விண்ணப்பதாரர், அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால், நிதி பெற தகுதியுடையவர்களாகக் கருதப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.கே. ரவுலிங் மகளிர் நிதி அமைப்பானது, (JKRWF) ரவுலிங்கின் மானியங்களால் மட்டுமே செயல்பட உள்ளது என்றும், பொது நன்கொடைகளை ஏற்காது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிற ஜே. கே.ரவுலிங், “பெண்களின் பாலின சமத்துவம் தொடர்பாக நான் அனைத்து வாய்ப்பையும் ஆராய்ந்தேன். ஒரு தனியார் நிதி அமைப்புதான் இதைச் செய்ய சரியான வழியாக இருக்கும் என உணர்ந்தேன். என்னுடைய அமைப்புக்கு நிறைய பேர் பங்களிக்க முன்வருகிறார்கள். அதை நான் உண்மையில் பாராட்டுகிறேன். பணத்தைக் கொண்டு பயனடையக்கூடிய பல பெண்கள் உரிமை அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளுக்கு நன்கொடை அளியுங்கள். எனக்கு நன்கொடை அளிக்க வேண்டாம்” என பதிவிட்டிருக்கிறார். பாலின சமத்துவம் தொடர்பான வழக்கு ஒன்றுக்கு 2010-லேயே ரவுலிங் நிதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.