
பாமக-வில் தற்போது உச்சக்கட்ட உட்கட்சி மோதல் நடந்து வருகிறது. புதுச்சேரி அருகே நடைபெற்ற கட்சி கூட்டத்தில் மேடையிலே அன்புமணி, ராமதாஸ் இடையே வாக்குவாதம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவரும், அவரின் மகனுமான அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். `அன்புமணிக்கு தலைமைப் பண்பு கொஞ்சம் கூட இல்லை. பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் செயல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மேடை நாகரிகம் இல்லாமல் செயல்பட்டது யார்? ஒரே நொடியில் கட்சியை உடைத்தது யார்? தான் செய்த செயலை மறைத்து, கட்சியினரிடமும் மக்களிடமும் அனுதாபம் பெற அன்புமணி முயற்சித்து வருகிறார்.” என்றெல்லாம் சொன்னவர், “தாயை பாட்டிலால் அடிக்க முயன்றவர். குருவை அவமதித்தவர். 35 வயதிலேயே அன்புமணியை எம்.பி ஆக்கியதுதான் நான் செய்த பெரிய தவறு. வளர்த்த கடா என் மார்பில் பாய்ந்துவிட்டது” என்று சொல்லி பகீர் கிளப்பினார்.
இதனிடையே முகுந்தன் தனது கட்சி இளைஞரணி பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை அன்புமணிக்கு அனுப்பினார். “மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.” என அதில் கூறி இருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் – கட்சி தலைவர் அன்புமணி இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டார் அன்புமணி. இதற்கான கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்று வருகிறது.

சோழிங்கநல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று முதல் 3 நாள்களுக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ராமதாஸுடன் ஏற்பட்டுள்ள மோதல், அவர் முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகள், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அன்புமணி தீவிர ஆலோசனை நடத்த உள்ளார் என்கிறார்கள்.
இந்த கூட்டத்தில், பாமக வில் திலகபாமா, பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாமக தலைவர் அன்புமணி என கோஷங்கள் எழுப்பினர்.
இதனிடையே ராமதாஸ், திலகபாமாவை கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து நீக்கியதுடன், சையது என்பவரை அப்பதவிக்கு நியமித்துள்ளார்.
இதனிடையே அன்புமணி கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இது குறித்து கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசுகையில், “அன்புமணி சில முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகளை நடத்த உள்ளார். குறிப்பாக கட்சியின் முழு அதிகாரத்தை தன் கையில் எடுப்பது குறித்து நிர்வாகிகளின் கருத்தை அறிய விரும்புகிறார் எனும் கருத்து நிலவுகிறது. நிர்வாகளின் ஆதரவுடம் அன்புமணி கட்சி பொறுப்புகளில் தனது ஆதரவாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார்.” என்கிறார்கள்.
இதனிடையே ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் பதவிகளை பறிக்க தொடங்கி இருப்பது மேலும் இந்த விவகாரத்தில் பரபரப்பை கூட்டி இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY