
மதுரையில் கழகப் பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும், எதிர்கட்சியை விமர்சித்தும் ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அவர் எழுதியிருக்கும் மடலில், “கூடிக் கலைவதல்ல கழகத்தின் நிகழ்வுகள். திசைவழியைத் தீர்மானிக்கும் செயல்பாடுகளைத் திட்டமிடும் களமாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அமைகின்றது. இதுதான் இந்த இயக்கத்தின் முக்கால் நூற்றாண்டு கால வரலாறு. கழகம் என்ன முடிவெடுக்கும் என்பதை உடன்பிறப்புகள் மட்டுமல்ல, மாற்று இயக்கத்தினரும் உற்று நோக்குகின்ற சூழலில்தான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த கூடல் மாநகராம் மதுரையில் கழகப் பொதுக்குழு கூடுகிறது.
பேரறிஞர் அண்ணா தலைமையில் உருவாகி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையில் இரும்புக் கோட்டையாகக் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மாநிலக் கட்சி என்ற நிலையை அடைந்திருப்பதற்குக் காரணம், பொதுக்குழு – செயற்குழு – மாநாடு என எதுவாக இருந்தாலும் அது கொள்கை சார்ந்த நோக்கத்துடன் நடத்தப்பட்டு, அதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, செயல்வடிவம் பெறுவதால்தான்.
ஒன்றிய அரசிடம் அடகு வைக்கும் வழக்கம் திராவிட மாடல் அரசுக்கு இல்லை!
கட்சியைத் தொடங்கிய நாளிலேயே “களத்திற்கு வா போராடலாம் – சிறையை நிரப்பலாம்” என்று கழகத் தொண்டர்களை அழைத்தார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. பதவி சுகத்திற்காகவே கட்சி தொடங்குபவர்கள், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கட்சியையே அடமானம் வைத்தவர்கள் நிறைந்த இன்றைய அரசியல் சூழலில், சிறைவாசத்தைச் சிரித்த முகத்துடன் ஏற்று, நெருக்கடி நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டுக் கடந்த வெற்றிகரமான இயக்கமாகச் செம்மாந்து நிற்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த மகத்தான இயக்கத்தைக் கட்டிக்காத்த உடன்பிறப்புகளாம் உங்களை வழிநடத்தும் தலைவனாக எனக்கு நீங்கள் அளித்திருக்கும் வாய்ப்பை, மக்கள் நலன் காக்கவும் – மாநில உரிமைகளை மீட்கவும் பயன்படுத்தி வருகிறேன். முந்தைய ஆட்சியாளர்கள்போல பதவிக்காக, மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைக்கும் வழக்கம் திராவிட மாடல் அரசுக்கு இல்லை. கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தர மறுத்தாலும், அண்ணா தந்த இருமொழிக் கொள்கையே இங்கே நிலைத்திருக்கும் என்ற உறுதியுடன் மாநில அரசின் நிதியில் கல்விக்குச் செலவிடுகிறோம்.
மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத உறுதிப்பாடு!
நகைக்கடன் நிபந்தனைகளால் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளை மக்கள் நாட முடியாத நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் மக்களுக்கு உதவுகிறோம். இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசின் செயல்பாடு. மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத உறுதிப்பாடு.
நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான கடமை என்ன? நம் இலட்சியப் பயணத்தின் இலக்கு எது? என்பதையெல்லாம் உடன்பிறப்புகளாம் உங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1-ஆம் நாள் கூடுகிறது. ஜூன் 1 காலை 9 மணிக்குப் பொதுக்குழு தொடங்குகிறது. கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனாகவும் பொதுக்குழு உறுப்பினர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் அன்புடன் அழைக்கின்றேன்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY