
புதுடெல்லி: "ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு பிரிவு 370, அப்பிரதேசம் இந்தியாவின் பிற பகுதியில் இருந்து தனியானது என்ற கருத்தை நீண்ட காலமாக உருவாக்கி வந்தது. அப்பிரிவினை அரசு ரத்து செய்ததன் மூலம் அந்தக் கருத்து இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது" என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள சல்மான் குர்ஷித், இந்தோனேசியாவில் உள்ள சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "அரசியலமைப்பு பிரிவு 370ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உறவினை ஏற்படுத்தியது. அது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. நீண்ட காலமாக காஷ்மீர் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது.