
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க, இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் இப்போது வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு வருகின்றன.
அதில் நேற்று சசி தரூர் கொலம்பியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கே அவர் பேசியதாவது, “கொலம்பிய அரசின் எதிர்வினை சற்று அதிருப்தி தருவதாக உள்ளது. இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்த பாகிஸ்தானியர்களுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பிய அரசு, தீவிரவாதத் தாக்குதலில் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் மீது எந்தப் பரிதாபமும் காட்டவில்லை.
பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல், பாகிஸ்தான் உதவி செய்த தீவிரவாதத்தால் தான் நடந்தது என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. நாங்கள் எங்களைத் தற்காப்புக்காகத் தான் இதை செய்கிறோம். கொலம்பியாவில் அது குறித்த விளக்க எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
கொலம்பியாவைப் போல, இந்தியாவும் ஏகப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைச் சந்தித்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளாக பல்வேறு தீவிரவாதத் தாக்குதலை இந்தியா பொறுத்துள்ளது.
பாகிஸ்தானிடம் இருக்கும் 81 சதவிகித தற்காப்பு ராணுவத் தளவாடங்கள் சீனாவில் இருந்து வந்தது தான். பாகிஸ்தானின் ராணுவத் தளவாடங்களை பொறுத்தவரை, ‘தற்காப்பு’ என்பது பணிவான வார்த்தை. அவர்கள் தற்காப்பை விட, தாக்குதலுக்காகத் தான் ராணுவத் தளவாடங்களை வைத்திருக்கின்றனர். நாங்கள் எங்களுக்கு எதிராக தூண்டப்படும் தீவிரவாதத்திற்கு எதிராக தான் போராடுகிறோம்” என்று பேசியுள்ளார்.