• May 30, 2025
  • NewsEditor
  • 0

மும்பையில் சொத்துகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் தென்மும்பை, மேற்கு புறநகரில் உள்ள பாந்த்ரா, அந்தேரி போன்ற பகுதியில் கடற்கரையையொட்டி கட்டப்படும் கட்டடத்தில் உள்ள பிளாட்களின் விலை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது.

தற்போது மும்பையில் 40 மாடிகள் கொண்ட கட்டடத்தில் 4 மாடிகள் ரூ.639 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. ஒர்லி கடற்கரையையொட்டி நமன் சானா என்ற பெயரில் 40 மாடி கொண்ட சொகுசு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் 32வது மாடியில் இருந்து 35வது மாடி வரை நான்கு மாடிகளை தொழிலதிபர் லீனா காந்தி திவாரி என்பவர் வாங்கி இருக்கிறார். இந்த வீடுகள் இரட்டை மாடிகளாகும். இது மொத்தம் 22,572 சதுர அடி பரப்பளவாகும்.

லீனா காந்தி

ரூ.639 கோடி வீடு..!

அரபிக்கடலையொட்டி இருக்கும் இக்கட்டத்தில் வாங்கப்பட்டுள்ள இந்த வீடுகளுக்காக தொழிலதிபர் திவாரி மொத்தம் ரூ.703 கோடி செலவு செய்திருக்கிறார். இதில் வீட்டு விலை ரூ.639 கோடியாகும். பதிவு மற்றும் முத்திரை கட்டணம் 63.9 கோடியாகும். ஒரு சதுர அடி 2.83 லட்சம் ரூபாயிக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் அதிக விலைக்கு விற்பனையான வீடுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த வீட்டை வாங்கி இருக்கும் லீனா காந்தி திவாரி யு.எஸ்.வி மருந்து கம்பெனியின் தலைவர் ஆவார். இந்த அளவுக்கு அதிக விலையில் வீடுகள் வாங்கியது குறித்து லீனா காந்தி திவாரி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்பு இதே ஒர்லி பகுதியில் கடற்கரையையொட்டி கோடக் மகேந்திரா வங்கியை சேர்ந்த உதய் கோடக் அடுக்கு மாடி கட்டடத்தில் 8 வீடுகளை ரூ.400 கோடி கொடுத்து வாங்கினார். ஒரு சதுர அடி ரூ.2.90 லட்சத்திற்கு விற்பனையானது. தென்மும்பையில் வீட்டு விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தாலும் தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் தொடர்ந்து சொத்துகளில் மீது முதலீடு செய்து கொண்டே இருக்கின்றனர். தென்மும்பையில்தான் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடும் இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *