
டெல்லியைச் சேர்ந்த 23 வயதான சமூக வலைதள பிரபலத்தின் மீது துணிக்கடை நடத்தும் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
கடந்த, 2021ம் ஆண்டு சமூக வலைதளம் வாயிலாக, அறிமுகமான அந்த பிரபலத்திடம், தனது ஆடைகளை விளம்பரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அப்போது விளம்பரம் தயாரிக்க புது ஐபோன் வேண்டும் என அந்த பிரபலம் கேட்டதால் ஜம்முவில் உள்ள அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர் மூலமாக போனை வாங்கி கொடுத்ததாகவும், ஆனால் அந்த போனை பெற்றுக் கொண்ட அந்த நபர் அதை பயன்படுத்தாமல் அதை மீண்டும் கடையிலேயே கொடுத்து பணமாக பெற்றுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பிரபலத்திடம் கேட்டபோது அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதுடன் 20,000 ரூபாய் பணத்தையும் கொடுத்திருக்கிறார்.
அதன் பிறகு விளம்பரம் எடுக்க வேண்டும் என அந்த பெண்ணை அழைத்துச் சென்று உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு மருத்துவமனை அழைத்துச் செல்வதாக கூறி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தன்னை இவ்வாறு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும் அந்த புகாரின் அந்த பெண்மணி தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த டெல்லி காவல்துறையின் சமூக வலைதள பிரபலத்தை கைது செய்தனர்.
கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் அவர் டெல்லி உயர் நீதிமன்றம் தனக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, டெல்லி காவல்துறையினருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
“எந்த அடிப்படையில் அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தீர்கள்?” என கேட்டனர். இது போன்ற பாலியல் விவகாரங்களில் ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வராது, புகார் கொடுத்திருக்கும் அந்தப் பெண் ஒன்றும் சிறுமி கிடையாது 40 வயதானவர். அவர் இந்த நபருடன் அடிக்கடி வெளியே செல்வது அவரது கணவருக்கும் தெரிந்திருக்கிறது. அவராக விருப்பப்பட்டு அந்த நபருடன் சென்றிருக்கிறார் என்னும்போது எப்படி இதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியும்.” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அந்த பிரபலத்தை உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவருக்கு முறைப்படி ஜாமீன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் அந்த நபர் இனி அந்தப் பெண்மணியை தொடர்பு கொள்ள கூடாது என்றும் அவருக்கு வழங்கப்படும் ஜாமீனை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தனர்.