• May 30, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்காவில் படிப்பு… அமெரிக்காவில் வேலை என்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள இளைஞர்களின் கனவு. ஆனால், இனி அது அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு காரணம், ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப்’.

அவர் தனது தேர்தல் பிரசாரத்தில் முக்கியமான முன்னெடுத்தது, ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’. ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்பதே அவருடைய நோக்கம். இது தான் அவரை நடந்து முடிந்த தேர்தலில் கணிசமான ஓட்டுகளைப் பெற வைத்தது.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளதில் இருந்து அமெரிக்க பொருளாதாரம், அமெரிக்க பாதுகாப்பு என அமெரிக்காவை மையமாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில், ‘அமெரிக்காவில் கல்வி’யும் அடங்கும்.

ஹார்வார்டு பல்கலைக்கழகம்

அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக யாரும் எந்தப் போராட்டத்திலும், கருத்து வெளிப்படுத்துதலிலும் ஈடுப்படக்கூடாது என்று நினைக்கிறார் ட்ரம்ப். இதை மீறுபவர்கள் சொந்த நாட்டினராக இருந்தால் அவர்களுக்கு படிப்பு தடைப்படும் என்றும், பிற நாட்டு மாணவர்கள் என்றால் கைது செய்யப்படுவார்கள் அல்லது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டது.

எச்சரிக்கையோடு நில்லாமல், இதை மீறுபவர்களின் மீது நடவடிக்கையிலும் ஈடுப்பட்டது ட்ரம்ப் அரசு. இதற்கு ஹார்வார்டு பல்கலைக்கழகம் நல்ல சாட்சி.

இப்போது பிற நாடுகளுக்கு அமெரிக்க தூதரகம் மூலம் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது அமெரிக்க அரசு. அதாவது, “கல்வி நிறுவனங்களிடம் முன்னரே தெரிவிக்காமல், படிப்பைப் பாதியில் நிறுத்துவது, வகுப்புகளுக்கு செல்லாமல் இருப்பது, பாடப்பிரிவில் இருந்து மாறுவது என இனி இருக்கக்கூடாது. மீறினால், அவர்களுக்கான மாணவர் விசா ரத்து செய்யப்படும்.

எதிர்காலத்தில் அவர்கள் அமெரிக்கா விசாவைப் பெறுவதற்கான தகுதியை இழப்பார்கள். அதனால், விசாவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை எப்போதும் பின்பற்றுங்கள் மற்றும் மாணவராக இருப்பதைத் தவிர, வேறு எந்தப் பிரச்னைகளிலும் ஈடுபடாதீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம்
அமெரிக்க தூதரகம்

மேலும், அமெரிக்க அரசிடம் இருந்து அமெரிக்க தூதரங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் படி, இப்போதைக்கு எந்த புதிய வெளிநாட்டு மாணவர்களுக்கும் கல்வி விசா நேர்காணலை ஃபிக்ஸ் செய்ய வேண்டாம். குறிப்பிட்ட மாணவர்களின் சமூக வலைதளப் பக்கங்களை தீவிரமாக ஆராயப் போகிறது. அதுவரை நேர்காணல்கள் தள்ளிப்போடப்படுகின்றது. ஆனால், இந்த ஆய்வு எதன் அடிப்படையில் அமையப்போகிறது என்று இதுவரை வெளியிடப்படவில்லை.

நேற்று முன்தினம், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புடையவர்களுக்கு மற்றும் அதன் அடிப்படையில் செயல்படும் மாணவர்களுக்கு இனி விசா கிடையாது என்று அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஓவல் ஆபீஸில் பேசிய ட்ரம்ப், “இடதுசாரி தீவிர கொள்கைகளுடைய மக்கள் மாணவர்கள் என்ற போர்வையில் அமெரிக்காவில் நுழைந்து, பிரச்னை ஏற்படுத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

ஆக, மொத்தம் ட்ரம்பும், அவரது அரசாங்கமும் எதிர்பார்ப்பது எல்லாம் ஒன்று தான்… மாணவர்களாக வந்தவர்கள் மாணவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். அதை மீறி எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. முக்கியமாக, அவர்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக எந்த செயலிலும் ஈடுப்படக்கூடாது.

வெளிநாட்டு மாணவர்கள் இந்த சட்டங்களினால் அமெரிக்க அரசுக்கு எதிராக கருத்து சொல்ல, போராட முடியாது. எப்போது வேண்டுமானாலும் அவர்களின் விசா ரத்து செய்யப்படலாம். இது ஒருவித பயத்துடனேயே அவர்களை வைத்திருக்கும். இதனால், பிற நாடுகளில் அமெரிக்காவில் கல்வி என்கிற ஆசையே கூட மடைமாறி போக வாய்ப்பு உண்டு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *