
புதுடெல்லி: இந்துத்துவா சித்தாந்தவாதியான விநாயக் சாவர்க்கர் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் ரத்த சம்பந்தமான உறவினர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சாவர்க்கரின் பேரன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, புனே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.
கோட்சேவுடன் தன்னை இணைக்கும் தனது தாய்வழி வம்சாவளியை சத்யாகி சாவர்க்கர் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சாவர்க்கர் குறித்து பேசியதற்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கை சத்யாகி சாவர்க்கர் தொடர்ந்தார். சாவர்க்கர் எழுதிய புத்தகத்தில், ஒரு முறை அவரும் சில நண்பர்களும் சேர்ந்து முஸ்லிம் நபரை அடித்ததாகவும், அதனை அவர்கள் மகிழ்ச்சியாக உணர்ந்ததாகவும் சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சத்யாகி சாவர்க்கர் குற்றம்சாட்டியிருந்தார்.