
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு தீவிரவாதிகள் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள தீவிரவாதிகள் வேறு நான்கு தாக்குதல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போது வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். காங்கிரஸின் கேள்விகளுக்கு பா.ஜ.க பதிலளிக்கவில்லை.
பயங்கரவாதிகள் மீது இருக்க வேண்டிய தாக்குதல் காங்கிரஸ் கட்சி மீதுதான் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு நாளும் ஏவப்படும் ஏவுகணைகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஏவப்படுகின்றன. ஒருபக்கம் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். இன்னொருபக்கம் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க நம் எம்.பி-கள் உலகம் முழுவதும் சுற்றுகிறார்கள். இந்த முரண்பாடு குறித்து காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது” என்றார்.
தொடர்ந்து, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, “இதுதான் காங்கிரஸ் எங்கள் இராணுவத் தாக்குதலை, எங்கள் ராஜதந்திர தாக்குதலை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இதற்காக நாடாளுமன்றம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?.

உலகளாவிய மக்கள் தொடர்புக் குழுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் அடங்குவர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரதிநிதிகளில் முக்கியமானவர் சசி தரூர், அவர் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளிக்க அனைத்துக் கட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.” என்றார். தீவிரவாதிகள் கைது செய்யப்படாதது குறித்த காங்கிரஸின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.