
விழுப்புரம்: “தாயார் மீது பாட்டிலை வீசினார், காடுவெட்டி குருவை கீழ்த்தரமாக நடத்தினார், தைலாபுரத்தில் 6 அடியாட்களை வைத்துள்ளார்…” என அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய பாமக நிறுவனர் ராமதாஸ், “அன்புமணியும், சவுமியாவும் எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர். பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்காவிட்டால், நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்கணும் என அன்புமணி கூறினார்” என்றார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று (மே 29) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியது: “நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என்னை பதவி இறக்கம் செய்தார் என தருமபுரியில் அன்புமணி பேசியது முழுக்க முழுக்க மக்களையும், கட்சி தொண்டர்களையும் திசை திருப்பும் செயல். தான் செய்த தவறுகளை மறைத்து, மக்களின் அனுதாபத்தை பெற முயற்சித்துள்ளார் என்பதுதான் உண்மை. இதற்கான பதிலையும், விளக்கத்தையும் அளிக்க வேண்டியது எனது கடமை.