• May 30, 2025
  • NewsEditor
  • 0

‘இறுதிப்போட்டியில் ஆர்சிபி!’

பெங்களூரு அணியின் நீண்ட கால ஆசை நிறைவேறியிருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு அணி ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது. வலுவான பஞ்சாப் அணியை மிக எளிதாக பெங்களூரு அணி வீழ்த்தியிருக்கிறது. எப்படி வென்றது ஆர்சிபி?

RCB Vs PBKS

போட்டியில் டாஸின் முடிவுதான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. டாஸை பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர்தான் வென்றார். முதலில் பௌலிங் செய்யப்போவதாகக் கூறினார். ‘பிட்ச்சில் கொஞ்சம் புற்கள் இருக்கிறது. முதல் சில ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும்.’ எனக் கூறினார்.

டாஸை தோற்ற ஸ்ரேயாஸ் ஐயர் ‘நாங்களும் முதலில் பந்துவீசவே விரும்பினோம்.’ என்றார். ஸ்ரேயாஸ் ஐயரின் விரக்தி நியாயமானதாகத்தான் இருந்தது. ஏனெனில், பஞ்சாப் அணியின் பேட்டர்களால் ஆர்சிபியின் பௌலிங்கை சமாளிக்கவே முடியவில்லை.

RCB
RCB

பஞ்சாப் அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. பவர்ப்ளேயிலேயே பெங்களூரு அணி போட்டியை கைக்குள் கொண்டு வந்துவிட்டது. முதல் 6 ஓவர்களுக்குள் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஹேசல்வுட் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜாஸ் இங்லிஸ் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் எட்ஜ் ஆகி கீப்பர் ஜித்தேஷ் சர்மாவிடம் கேட்ச் ஆனார்.

ஜாஸ் இங்லிஸ் ஒரு ஷார்ட் டெலிவரியில் புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் ஆனார். யாஷ் தயாளும் புவனேஷ்வர் குமாரும் ஓப்பனர்கள் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினர். யாஷ் தயாள், ஹேசல்வுட் இருவரின் முதல் ஸ்பெல்லையும் ரஜத் பட்டிதர் நீட்டித்தார். இருவரும் தலா 3 ஓவர்களை வீசினர். அதற்கும் பலன் கிடைத்தது. யாஷ் தயாள் நேஹல் வதேராவை போல்ட் ஆக்கினார்.

RCB
RCB

பிட்ச்சில் புற்கள் நிறைந்திருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தினர். குறிப்பாக, பெரும்பாலான பந்துகளை குட்லெந்திலும் ஷார்ட் பிட்ச்சாகவும் வீசி திணறடித்தனர். பவர்ப்ளேக்கு பிறகு லெக் ஸ்பின்னர் சுயாஷ் சர்மா கூக்ளிக்களாக வீசி கலக்கினார். அவரின் கூக்ளிக்களை சமாளிக்க முடியாமல் ஸ்டாய்னிஸ், சஷாங்க் சிங், முஷீர் கான் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தார். பஞ்சாப் அவ்வளவுதான்.

RCB
RCB

சுருண்டு விழுந்தது. 101 ரன்களுக்கு ஆல் அவுட். டாப் ஆர்டரில் விக்கெட்டுகளை இழந்த பிறகும் மிடில் ஆர்டரின் பலத்தால் பஞ்சாப் அணி 200 ரன்களை இந்த சீசனில் சில போட்டிகளில் கடந்திருக்கிறது. இன்றைய போட்டியில் சுயாஷ் சர்மா அதை செய்யவிடாமல் தடுத்தார்.

ஆர்சிபிக்கு 102 ரன்கள் டார்கெட். கோலியும் மயங்க் அகர்வாலும் அவுட் ஆனாலும் சால்ட்டின் அதிரடியால் எந்த சிரமமும் இல்லாமல் போட்டியை முடித்தனர். கடைசியாக 2016 சீசனில் ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது. 8 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கின்றனர். எல்லாம் கூடி வருகிறது. இது ஆர்சிபிக்கான சீசனாகத் தெரிகிறது. வாழ்த்துகள் பாய்ஸ்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *