
முட்டுக்காடு: சென்னை அருகே முட்டுக்காடு பகுதியில் 37.99 ஏக்கர் பரப்பளவில், 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (மே 29) நடைபெற்றது.
சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் 37.99 ஏக்கர் பரப்பளவில் வெளிநாடுகளில் உள்ளது போன்ற கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த 525 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் 10,000 பேர் ஒரே நேரத்தில் பார்வையிடும் வகையில் கண்காட்சி அரங்கம், 5,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலான மாநாட்டுக் கூடம், பல்வேறு சிற்றரங்கங்கள், திறந்தவெளி அரங்குகள், உணவு விடுதிகள், 10,000 வாகனங்களை நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் இந்த அரங்கம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும்.