• May 29, 2025
  • NewsEditor
  • 0

இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர், ரிச் பிளஸ் ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் இன்று (29-ம் தேதி) சென்னையில் கையெழுத்தானது.

ரிச் ப்ளஸ் பயோ உரங்கள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அசோகன் சாரங்கன் பேசியபோது, “இன்றைய சூழலில் ஆரோக்கியம் என்பது மிகப் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. அதேபோல விவசாயிகள் விவசாயத்தில் நீடித்து நிலைத்து இருக்க வேண்டுமானால் இயற்கை விவசாயம் மிகவும் அவசியம். உலகம் முழுவதும் நல்ல சுற்றுச்சூழல் என்பது சவாலாக இருந்து வருகிறது. அந்த வகையில் நீண்டகால செயல்முறைகளுக்கு உதவும் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.

அசோகன் சாரங்கன்

அதை ஐ.ஓ.பி வங்கியோடு இணைந்து முன்னெடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அமுல் நிறுவனத்தின் சார்பில் 2021-ம் ஆண்டு இயற்கை உரங்களை உற்பத்தி செய்ய களத்தில் இறங்கியது. அமுல் நிறுவனத்தோடு கைகோத்து இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் சார்பில் தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மஞ்சள், வாழையில் நல்ல மகசூல் எடுத்து வருகிறார்கள் விவசாயிகள். இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தி நல்ல விளைச்சல் எடுக்கலாம். ரசாயன உரங்களுக்கு செய்யும் செலவைவிட சற்று குறைவாகத்தான் இதற்கு ஆகும்” என்றார்.

அமுல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமித் வியாஸ் பேசியபோது, “அமுல் என்றாலே பால் பொருள்கள்தான் நிறைய பேருக்குத் தெரியும். தற்போது இயற்கை உரத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறோம். இந்தியா பால் உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவில் கால்நடைகள் அதிகம். அதிலிருந்து டன் கணக்கில் சாணம் கிடைக்கிறது. இந்த சாணத்தைப் பயன்படுத்தி பயோ காஸ் தயாரித்து வருகிறோம். பயோ காஸ் உற்பத்திக்குப் பயன்படுத்திய சாண கழிவைக் கொண்டு இயற்கை உரங்களைத் தயாரிக்கிறோம்.

அமித் வியாஸ்

அதனால், இது மண்ணுக்கு வளத்தைக் கூட்டும். மண்ணில் கார்பன் சத்தை அதிகரிக்கும். சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. இயற்கை விவசாயத்தில் நஞ்சில்லாத உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய இயற்கை உரங்கள் பெருவாரியாக பங்களித்து வருகின்றன. அமுல் நிறுவனத்தின் உரங்கள் சான்று பெற்ற உரமாகும். ஐ.ஓ.பி வங்கியோடு இணைந்து இந்த இயற்கை விவசாய முயற்சியை முன்னெடுப்பதன் மூலம் இந்திய வேளாண்மையில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். விவசாயிகள் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும். நீடித்த நிலையான வளர்ச்சியை விவசாயத்தில் ஏற்படுத்தும்” என்றார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண் இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான அஜய்குமார் ஶ்ரீவஸ்த்வா பேசியபோது, “சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் விதத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1937-ல் தொடங்கப்பட்ட இந்த வங்கி, இந்தியா முழுவதும் 3,335 கிளைகளைக் கொண்டுள்ளது. இயற்கை விவசாயத்துக் கென்று இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம். இந்த நிகழ்வு ஒரு மைல்கல்.

அஜய்குமார் ஶ்ரீவஸ்த்வா

தமிழ்நாட்டில் சென்னை நீங்காலக மற்ற 37 மாவட்டங்களிலும் ஐ.ஓ.பி வங்கியின் கிளையில் தள்ளுபடி விலையில் இயற்கை உரங்களை விவசாயிகள் வாங்கலாம். இதோடு 300 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடர்பில் உள்ளன. 1 லட்சம் விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இப்போது தொடங்குயிருக்கிறோம். தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இதை முன்னெடுக்க இருக்கிறோம். ரசாயன விவசாயிகள், இயற்கை விவசாயிகள் அனைவரும் இதில் பயன்பெறலாம்.

ஒப்பந்தம்

இன்று அறிமுகப்படுத்தியிருக்கும் இயற்கை விவசாய அடையாள அட்டை, விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை வாங்கவும், கடன் பெறவும் உதவியாக இருக்கும். ஐ.ஓ.பி வங்கியின் சார்பில் ‘ஹரித் கிராந்தி’ (HARIT KRANTI) என்ற திட்டத்தைத்தொடங்கியிருக்கிறோம். இதில் முக்கியமாக இயற்கை விவசாயத்துக்கு மாற நினைக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். ஒரு தனிநபர் விவசாயி, விவசாயிகள், குத்தகை விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள் 50 லட்சம் வரை கடன் பெறலாம். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் 5 கோடி வரை கடன் பெறலாம். இந்தத் தொகையை 5 ஆண்டுகளில் கட்டலாம். சூழலுக்கும் பங்களிக்கும், அதேசமயம் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க நினைக்கும் விவசாயிகளை அழைக்கிறோம். தமிழ்நாட்டில் 800-க்கும் மேற்பட்ட ஐ.ஓ.பி வங்கி கிளைகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் ஐ.ஓ.பி வங்கி கிளையை அணுகலாம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *