
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.சந்தூர்கர் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று மூவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
இதனை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.சந்துர்கர் ஆகியோரை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதில் குடியரசு தலைவர் மகிழ்ச்சியடைகிறார்," என்று அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.