
கொல்கத்தா: “மேற்கு வங்கத்துக்கு நாளையே கூட தேர்தல் நடத்துங்கள். நாங்களும், மேற்கு வங்க மக்களும் தயாராகவே இருக்கிறோம்” என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மேலும், நேரலை விவாதத்துக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கொடூரமானது (நிர்மம்தா), ஊழல் நிறைந்தது. மக்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நான் உங்களுக்கு (பிரதமர்) சவால் விடுகிறேன். என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு வாருங்கள். நீங்கள், உங்கள் டெலிபிராம்ப்ட்டரையும் கொண்டுவரலாம்" என்று சவால் விடுத்துள்ளார்.