
புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திருந்த தங்க நகைகளைக் காணவில்லை என்று தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.
அதனடிப்படையில் அங்கு பணி புரிந்த கலையரசி என்ற பெண்ணை விசாரணைக்கு அழைத்த தவளக்குப்பம் போலீஸார், எஸ்.ஐ சண்முக சத்யா உள்ளிட்ட காவலர்கள் அவரை நிர்வாணமாக்கி தாக்கியிருக்கின்றனர். அதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் கலையரசி அளித்த புகாரின் அடிப்படையில் பெண் எஸ்.ஐ சண்முக சத்யா உள்ளிட்ட காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட், வி.சி.க-வினர் போராடி வரும் நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பியிருக்கிறது மக்கள் உரிமை கூட்டமைப்பு. இதுகுறித்துப் பேசிய மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், “தவளக்குப்பம் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் நகை திருடு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த 11.05.2025 அன்று தவளக்குப்பம் காவல்நிலையப் போலீசார் அங்கு பணிபுரியும் பூர்ணாங்குப்பத்தைச் சேர்ந்த கலையரசி உட்பட 4 பெண் ஊழியர்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு 4 பேரையும் கடுமையாக தாக்கி அவமானப்படுத்தி உள்ளனர். மனைவி தாக்கப்பட்டது பற்றி அறிந்த கலையரசியின் கணவர் அர்ஜூனன் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துபோனார். இச்சம்பவத்திற்குத் தவளக்குப்பம் பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார்தான் காரணம்.
அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியதால் தற்போது காவல் உதவி ஆய்வாளர் சண்முக சத்யா, காவலர்கள் சுரேஷ், வசந்த ராஜா, பெண் காவலர் பிருந்தா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெண்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்து போலீஸார் விசாரிக்கக் கூடாது. அவர்கள் வசிக்கும் இடத்திற்கோ அல்லது அவர்கள் தேர்வு செய்யும் இடத்திற்கோ சென்று விசாரிக்க வேண்டுமென்று பி.என்.என்.எஸ். சட்டப் பிரிவு 179(1) கூறுகிறது.

ஆனால், தவளக்குப்பம் போலீசார் காவல்நிலையத்தில் 4 பெண் ஊழியர்களையும் நள்ளிரவு 1 மணிவரை விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தியது சட்ட விரோதமானது. காவல்துறை தற்போது பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசாரை பணியிட மாற்றம் செய்துள்ளது போதுமான நடவடிக்கை அல்ல. அனைவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
அத்துடன் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதுடன், பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பி.என்.என்.எஸ். சட்டப் பிரிவு 179(1)-ன்படி பெண்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கக் கூடாது என்பது குறித்து அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்பியிருக்கிறோம்” என்றார்.