
மதுரை: விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகையை ரூ.800 கோடியை 10 நாட்களுக்குள் வழங்காவிட்டால் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியை மதுரைக்குள் நுழைய விடாமல் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: “முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் குழு, உச்ச நீதிமன்றத்தில் உறுதியான தீர்ப்பை பெற்று தமிழக உரிமையை மீட்டுள்ளனர். தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இயலாத நிலையில் கேரள அரசால் அணைக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.