
கென்யா நாட்டின் அறியப்பட்ட எழுத்தாளர் கூகி வா தியாகோ. மே 28ம் தேதி அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில், தனது 87வது வயதில் காலமாகியிருக்கிறார்.
அவரது மகள் வஞ்சிகு வா கூகி, “எங்கள் தந்தை மறைந்துவிட்டார் என்பதைக் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். அவர் முழுமையாக வாழ்ந்துள்ளார். நன்றாகப் போராடியிருக்கிறார்” என மறைவுச் செய்தியை அறிவித்திருக்கிறார்.
1938ம் ஆண்டு பிறந்த இவர், கென்யாவின் முக்கியமான பின் காலனித்துவ எழுத்தாளராகப் பார்க்கப்படுகிறார்.
இவரது இளம் பருவத்தின்போது கென்யாவில் நடந்த மாவு மாவு போர் (Mau Mau war) அந்த நாட்டின் சுதந்திரத்துக்கு வழிவகுத்த முக்கிய நடவடிக்கையாக மாறியது.
இந்தப் போர் அவரது ஆளுமையை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
தனது படைப்புகளில், 1963ம் ஆண்டு முடிவுக்கு வந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியையும், பின் காலனித்துவ சுதந்திர சமூகத்தையும் சமமாக விமர்சித்திருக்கிறார்.
இவரது படைப்புகள் மொழி, கலாசாரம், வரலாறு, அடையாளம் ஆகியவற்றை முக்கிய கருப்பொருளாகக் கொண்டுள்ளன.
தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கிய கூகி, 1970களில் கிகுயு மற்றும் சுவாஹிலி ஆகிய உள்நாட்டு மொழிகளுக்கு மாறினார். அந்தக் காலத்தில் இது மிகவும் சர்ச்சைக்குரிய முடிவாக இருந்தது.

அந்த நேரத்தில் சக எழுத்தாளர்கள் இவரது முடிவைப் பைத்தியக்காரத்தனம் என விமர்சித்துள்ளனர். யார் இந்த மொழி புத்தகங்களை வாங்குவார் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விமர்சனங்களுக்கு “Decolonising the Mind” என்ற தனது படைப்பில், “அடக்குமுறையாளரின் மொழியைப் பயன்படுத்திக்கொண்டே நம்மை விடுதலை செய்துகொள்ள முடியாது” எனப் பதிலளித்துள்ளார்.
1977ம் ஆண்டு நடத்திய ஒரு நாடகத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கூகி.
சுதந்திரத்துக்குப் பிறகும் கென்ய மக்களின் கஷ்டங்கள் குறையவில்லை. இதற்குக் காரணமாக இருந்த உயர் அந்தஸ்து பெற்ற பணக்காரர்கள்தான் என்று குற்றஞ்சாட்டியவர், “இவர்கள்தாம் நம் (கென்யர்கள்) நம்பிக்கைகளின் மரணம், கனவுகளின் மரணம், அழகின் மரணம்” என விமர்சித்தார்.
1982ம் ஆண்டு அவர் கென்யாவில் நாடகக் குழுக்களை நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டதால், இங்கிலாந்துக்குச் சென்றார்.
பின்னர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
எங்கிருந்தாலும் தொடர்ந்து கென்யாவைப் பற்றி கட்டுரைகள், நாவல்கள், நினைவுகுறிப்புக்ளை எழுதிவந்தார்.
ஆப்பிரிக்கச் சமூகத்தை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இவரது படைப்புகள் முக்கியமானவையாக இருக்கும். கென்யாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய ஏமாற்றங்களையும், முதலாளித்துவத்தின் தாக்கத்தையும் விமர்சிக்கும் இரத்தப் பூக்கள், காகத்தின் மந்திரவாதி உள்ளிட்ட நாவல்களும், காலனித்துவம் குறித்த காலனிய ஓர்மை நீக்கம் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY