
புனித நகரமான மெக்காவுக்கு வழக்கம்போல பயணம் செய்த லிபியாவைச் சேர்ந்த யாத்ரீகருக்கு ஏற்பட்ட தடைகள், அவற்றைத் தாண்டிய அவரது விடாப்பிடியான உறுதியும் நம்பிக்கையும் உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.
ஹஜ் பயணம் மேற்கொள்வது இஸ்லாமியர்களின் இறை வாழ்க்கையில் மிகவும் ஆழமான ஆன்மிக விருப்பமாகும். அமீர் அல் மஹ்தி மன்சூர் அல் கடாபி என்ற இளைஞர் ஹஜ் பயணம் மேற்கொள்வதில் உறுதியாக இருந்துள்ளார்.
(عامر المهدي منصور القذافي) شاب ليبي قرر حج بيت الله وعند وصوله المطار واجه مشكلة أمنية في جواز السفر (بسبب اسم العائلة) فتأخر وأصر الكابتن على الإقلاع بدونه قائلاً بأنه لا يمكن الانتظار حتى يتم حل مشكلة الجواز… أمّا عامر فأصر بأنه لن يبرح المطار حتى يذهب للحج.
أقلعت الطائرة… pic.twitter.com/RMSdVrr4rO
— إياد الحمود (@Eyaaaad) May 23, 2025
ஆனால் விமான நிலையத்திலேயே அவருக்கு பிரச்னைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
லிபியாவில் உள்நாட்டுப்போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்திருந்தாலும் சில அமைப்புகள் ‘அல் கடாபி’ என்ற பின் பெயருடன் தொடர்புபடுத்தப்படுவதால் பாதுகாப்பு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
குடியேற்ற அதிகாரிகள் அவரைத் தடுத்ததனால், உடன் வந்தவர்கள் விமானத்தில் ஏறிய பிறகும் அமீர் விமான நிலையத்திலேயே காத்திருந்தார். அமீர் எவ்வளவு கெஞ்சியும் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் நேர கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி அவரை ஏற்றிக்கொள்ள மறுத்துவிட்டனர்.
ஆனால் அமீர், “நான் மெக்காவை நோக்கி செல்லாவிட்டாலே ஒழிய இங்கிருந்து நகரமாட்டேன்” என விமான நிலைய அதிகாரிகளிடம் உறுதியாகக் கூறியுள்ளார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு தொழில்நுட்பக் காரணங்களால் விமானம் மீண்டும் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. பழுது பார்க்க தாமதமாகி, மீண்டும் புறப்பட்டது. அப்போது மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அவசர அவசரமாக விமானத்தைத் தரையிறக்கிய விமானி, இந்த முறை அமீரை ஏற்றிக்கொள்ளாமல் புறப்பட மாட்டேன் எனக் கூறினாராம்.
அதிகாரிகள் விரைவாக அமீரை பயணத்துக்கு அனுமதித்துள்ளனர். மூன்றாவது முறை அமீருடன் செல்கையில் விமானம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சென்றுள்ளது.
இந்த கதை சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்துப் பேசிய அமீர், “நான் ஹஜுக்கு மட்டுமே செல்ல விரும்பினேன். அது எனக்காக எழுதப்பட்டிருந்தால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.