• May 29, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அதிகாலை நேரம். மேகங்களின் விளிம்பில் சூரியனின் ஈஸ்ட்மென் நிற வெளிச்சப் பரவல். பால்காரனின் மணி சத்தம் , காய்கறி விற்பவரின் வியாபார சத்தம் என்று கலவையாய் அன்றைய பொழுது விடிந்தது.

சூரியனின் வெளிச்ச சிதறல்கள் ஜன்னல் வழியே வந்து அவர்களது வீட்டில் கோலமிட்டு இருந்தது. மனிதர்களின் மனம் கூட இதுபோல் வெளிச்சமாய், விசாலமாய் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்..அவளுக்குள் சலிப்பின் ஊர்வலம் . அன்று காலையில் எழும்போதே அவளது மனது சரியே இல்லை . நேற்று இரவு நடந்த அனைத்தும் அவள் மனதில் படம் போல் ஓடியது.

“பூரணி.. ஒரு முக்கியமான விஷயம்.. அக்கா போன் பண்ணுச்சு ..வசந்திக்கு இந்த வார கடைசில விஷேஷம் வச்சிருக்காம் .. நம்மள கண்டிப்பா வர சொல்லுச்சு..போயிட்டு வருவோமா ..”, அடுப்பு மேடையில் சாய்ந்து நின்று அவள் சுட்டு தந்த தோசைகளை உண்டபடி அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவள் பதிலே சொல்லவில்லை . அடுப்பில் எரியும் நெருப்பு மனதுக்குள் இடம் பெயர்ந்து விட்டதோ எனும் படி மனதுக்குள் கோப நெருப்பின் வெம்மையை உணர்ந்தாள் . திடீரென இப்ப எப்படி நம்ம ஞாபகம் வந்ததாம் . நேத்திக்கு வரைக்கும் நம்ம யாருன்னு கூட தெரியல.. இன்னைக்கு மட்டும் என்ன திடீர் பாசம்??

அவள் பதில் சொல்லாமல் வெறித்துப் பார்ப்பதை உணர்ந்தவன், ” பூரணி ..நீ என்ன நினைக்கிறனு எனக்கு நல்லா புரியுது.. அவங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.. உனக்கு இந்த கோபம் ஆகாதுடா.. அதுவும் உனக்குள்ள நம்ம பாப்பா வளருகிற இந்த நேரம் இவ்வளவு கோவம் உனக்கு ஆகவே ஆகாது.. புரிஞ்சுக்கடா தங்கம்..”, அவன் சமாதானப்படுத்த அவள் திரும்பி அவனை முறைத்தாள்.

” சரிடா சரிடா ..பொறுமையா பேசிக்கலாம் விடு.. அதுக்கு தான் இன்னும் நாள் இருக்குல ..” என்றான். அப்போதும் அவள் பதில் சொல்லவில்லை . கடந்து வந்த காலங்கள் அவள் மனதிற்குள் திரைப்படமாய் ஓடியது.

“என்னைக்கு இருந்தாலும் எங்க வசந்தி என் தம்பிக்கு தான்”, அக்கா எப்பொழுதும் பெருமையாக சொல்லிக் கொண்டு திரிந்த நேரம் அது. உறவிற்குள் திருமணம் முடிப்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை .

பூரணி அவனுடன் கல்லூரியில் ஒன்றாய்ப் பயின்றவள். ஆரம்பத்தில் அவள் மீது அவனுக்கு பெரிய ஈர்ப்பென்று ஒன்றுமில்லை. நாட்கள் செல்ல செல்ல அவளது துடிப்பும் உற்சாகமும் அவனையும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது . அவள் யார் என்று அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அவன் மனதை முதலில் அவனது நண்பன் தான் கண்டு பிடித்து அவனுக்கு அறிமுகப்படுத்தினான்.

” யாருடா இந்த பொண்ணு ..எப்ப பாத்தாலும் சிவகாசி பட்டாசுல நெருப்பு பத்த வச்ச மாதிரி பட படன்னு வெடிச்சுக்கிட்டு.. இது கூட படிக்கிறதெல்லாம் இப்படியா குதிச்சுக்கிட்டு இருக்குது?? “

” படிக்கிற காலத்துல இப்படித்தான் இருக்கனும்..பின்ன அடக்கம் ஒடுக்கமா இருக்க இதென்ன பொண்ணு பாக்கற விசேஷமா ?” கண்களில் ரசனையுடன் அவன் சொல்ல,

” தம்பி .. உன் முழியே சரி இல்லையே ..நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன். அவ கடந்து போனாலே உன் முகத்துல பல்பு எரியுதே ..என்னடா நடக்குது ???” இனம் இனமறிந்தது. “

அதெல்லாம் ஒண்ணுமில்ல ..ஏதாச்சும் உளறாதே ” அவன் முகச் சிவப்புடன் மறுத்தான்.

“அடேய்ய்ய்ய் ..மச்சான் மாட்டிகிட்டான் …” நண்பனின் உற்சாக குரலில் அவன் மேலும் சிவந்தான்.

” அவகிட்ட சொல்லிட்டியாடா ? “

” இன்னும் இல்ல ..இப்போ ஏதோ பொதுவா பேசறா ..நான் இப்டி னு சொல்ல போயி , அவளோட நட்பும் காணாம போகணுமா ..ஒன்னும் வேணாம் சாமி ..இருக்கறது போல இருக்கட்டும்!! “

அன்றிலிருந்து அவள் அவனைக் கடக்கும் பொழுதெல்லாம் பார்வைக்கும் வலிக்குமோ எனும்படி மென்மையாய் அவளை வருடும் பார்வையிலேயே வாழத் தொடங்கினான்.

அவளிடம் மனம் திறக்கும்படி சொல்லிய நண்பர்களிடமும், என் காதல் சொல்லப் படாமல் போனாலும் போகட்டும், அவள் மனம் காயப்பட்டு விடக் கூடாது என்று மறுத்து விட்டான் .

ஒருநாள் அவர்களது கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட குழுவும், அரிமா சங்கமும் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடந்தது. அவள் தன் தோழிகளுடன் ரத்ததானம் செய்ய முன்வந்து இருந்தாள் . ரத்தம் கொடுத்து விட்டு எழுந்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.. உடன் வந்து தோழியர் என்ன ஏது என்று நடந்ததை உணரும் முன்பே ஓடிவந்து அவளை மடி தாங்கியவன், “பூரணி..என்ன ஆச்சும்மா உனக்கு..எழுந்துக்கோ பூரணி..” என்று பதறித் தவித்தான் .

முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை ஆசுவாசப்படுத்திய செவிலியர், “ஒண்ணும் இல்ல.. ஏதோ வீக்னஸ்.. மயங்கிட்டாங்க அவ்வளவுதான்..நீங்க பதறாதீங்க” என்று அவனைத் தேற்றினர்.

உடன் வந்த தோழியர் மூலம் நடந்ததை அறிந்தவள், மறுநாள் அவனிடம் வந்து நன்றி கூறினாள் . ” நேத்திக்கு ஏதோ தலை சுத்தின மாதிரி இருந்தது மயங்கி விழுந்துட்டேன்.. நீதான் தண்ணி எல்லாம் தெளிச்சு என்னை எழுப்பி விட்டன்னு பிரண்ட்ஸ் சொன்னாங்க.. ரொம்ப தேங்க்ஸ் ” என்று நன்றி உரைத்தாள். வழக்கம்போல மௌனமான புன்னகையுடன் அதை அங்கீகரித்தவன் ” உடம்ப பாத்துக்கோ”, என்று மட்டும் சொல்லிவிட்டு நடந்து விட்டான் .

காலமும் நேரமும் யாருக்கும் காத்திராமல் விரைந்து ஓடியது. கல்லூரியின் இறுதி ஆண்டு அவர்கள் வகுப்பில் வட இந்திய நகரங்களுக்கு சுற்றுலா சென்றார்கள். அந்த ரயில் பயணம் அவர்களது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நண்பர்களுடன் சேர்ந்து வார்த்தை விளையாட்டு , சீட்டு கட்டு விளையாட்டு என்று விளையாடிக் கழித்தவர்கள், ஒரு கட்டத்தில் நண்பர்கள் அனைவரும் அயர்ந்து உறங்கிய போதும் உறக்கம் வராமல் பேசிக்கொண்டு பயணித்தனர்.

“வருஷம் போனதே தெரியல..இதோ ஆச்சு.. இன்னும் நாலு மாசத்துல படிச்சு முடிக்க போறோம் அதுக்கப்புறம் என்ன செய்ற ஐடியாவில் இருக்கற “

“கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகி ஆச்சு.. வேலைல ஜாயின் பண்ண வேண்டியதுதான்.. நீ ??”

” நானும் தான் ..நீயும் நானும் ஒரே கம்பெனியில் தானே செலக்ட் ஆகி இருக்கோம்? “

“ஆமா ல..பார்க்கலாம் எந்த பேட்ச் போடுறாங்கன்னு தெரியல..”

இந்த ரீதியில் அவர்களது உரையாடல் தொடர்ந்தது . அவர்களது குடும்பம் விருப்பங்கள் வெறுப்புகள் என்று ஆகாயத்தின் கீழ் இருக்கும் அனைத்தையும் பற்றி பேசி சிரித்தார்கள்.

உரையாடலின் இறுதியில் அவர்களது நட்பில் ஒரு நெருக்கம் தோன்றியதை இருவருமே உணர்ந்தார்கள். அந்த சுற்றுலா இருவரது நட்பிலும் புதிய புதிய பரிணாம வளர்ச்சியை கொண்டு வந்தது .

பட்டாம்பூச்சிகளாய் திரிந்த கல்லூரி காலமும் முடிவுக்கு வந்தது . இருவரும் பணியில் சேர்ந்தார்கள். கல்லூரியின் நட்பு அலுவலகத்திலும் தொடர்ந்தது.

ஒரு நாள் மதிய உணவுக்கு சந்தித்தபோது அவன் மிக தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டவள், ” என்ன பிரச்சனை ? முகமே சரியில்ல? ” என்று விசாரித்தாள் .

“இல்ல.. ஊர்ல இருந்து அக்கா போன் பண்ணினாங்க.. அவங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு எல்லாரும் ஆசைப்படுறாங்கன்னு சொன்னாங்க.. அதான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் ” என்றவன், ” நீ என்ன நினைக்கிற??” என்று கேட்டான்.

முகம் இருள, ” நான் சொல்வதற்கு என்ன இருக்கு? உனக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ.. உன் இஷ்டம் தானே “, என்றாள்.

அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தவன், ” நான் வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையா??”, என்று கேட்டான்.

அவன் கண்களை சந்திப்பதை தவிர்த்து எங்கோ பார்த்தபடி , “எனக்கு என்ன பிரச்சனை? ” என்று சொல்லும் முன்பே அவளது கண்களில் கண்ணீர் நிறைந்தது.

சட்டென அவள் கைகளை பற்றியவன், “ஆனா எனக்கு கஷ்டம் ஆச்சே.. என்னோட நாலு வருஷ காதல காத்துல விட்டுட்டு எப்படி திடீர்னு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்றது ..ம் ..? என்று புன்சிரிப்புடன் கேட்டான் .

கண்ணீரை மறந்து விழி அகல அவனைப் பார்த்தவள், “என்னது நாலு வருஷ காதலா? ” என்று விழித்தாள் . “ஆமா.. முதல் வருஷம் உன்னை நான் என்னைக்கு நம்ம கிளாஸ்ல பாத்தேனோ அன்னையிலிருந்து நீதான் என் உயிர்.. அது உனக்கு புரியல. நான் என்ன பண்ண முடியும் ?” என்று சிரித்தான் .

“சொல்லவே இல்ல?” என்ற ஆச்சரியமாய் கேட்டவளிடம் , ” ம்..இப்ப முட்டை கண்ண முழிச்சு பாரு.. எங்க உன் கிட்ட சொன்னா உன்னோட பிரெண்ட்ஷிப்பும் இல்லாம போயிருமோன்ற பயத்திலேயே சொல்லாமல் மறச்சிடேன்” என்றான் .

“அடப்பாவி.. அதுக்காக இத்தனை வருஷமும் சொல்லாம இருப்பியா..” என்று ஊடல் கொண்டவளிடம் , ” பயமா இருந்துச்சு..அதான் ..” என்று அசடு வழிந்தான் .

புன்னகையும் கண்ணீருமாய் முறைத்தவள் , முடியாமல் சிரித்து விட்டாள் .

அவர்களது திருமணம் அவ்வளவு எளிதாய் நடந்துவிடவில்லை .அவனது வீட்டில் அவர்களை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டார்கள்.

அவர்கள் வீட்டு பெண்ணின் மனம் கோணி விடக் கூடாதாம் . வீட்டில் பிறந்த பெண்ணை பற்றி நினைத்துப் பார்த்தவர்கள் வீட்டில் வாழ வரும் பெண்ணின் மனதைப் பற்றி மறந்து போனது என்னவோ காலத்தின் கொடுமைதான். அவளது வீட்டில் அந்த அளவுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் முழு சம்மதமும் இல்லை. திருமணம் செய்து வைத்ததோடு எங்கள் கடமை முடிந்தது என்று விலகிக் கொண்டார்கள்.

திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை என்ற என்பது மிகப்பெரிய குறையாகவே பார்க்கப்பட்டது. பொதுவான உறவுகளின் திருமணங்களுக்கு, பொதுவான உறவினர்களின் வீட்டு வைபவங்களுக்கு சென்றவர்கள் பல இடங்களில் அவமானப்படுத்தப்பட்டு திரும்பினார்கள்.

“பெத்தவ வயிற எரிய வச்சு சேர்ந்தவ வயிறு எப்படி திறக்கும்??”

என் பொண்ண கட்டி இருந்தா சீரா சிறப்பா வாழ்ந்திருப்பான் ..தேடி தேடி கொண்டு வந்த புண்ணியவதி இன்னும் சும்மா தான் இருக்காளா “..

உறவுகள் நாவில் விஷம் தடவி பேசினார்கள் .

மனதை காயப்படுத்தி அதில் மகிழும் உறவுகள் நமக்கு வேண்டியதே இல்லை என்று முடிவுடன் ‘எனக்கு நீ.. உனக்கு நான்’ என்று வாழ தொடங்கினார்கள் . ஒருநாள் காலையில் கண்விழித்தவள் திடீரென மயங்கிச் சரிய ,அவளை அள்ளி எடுத்தவன் பதறிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

மருத்துவர் சொன்ன செய்தியில் உலகை வென்ற மகிழ்ச்சியில் குதித்தவன் அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கினான் . சற்றே மேடிட்ட வயிற்றை மெதுவாகத் தடவிப் பார்த்தவள் , “உங்க அப்பா மாதிரி ஏமாளி இந்த உலகத்திலேயே கிடையாது” என்று குழந்தையுடன் மனதோடு பேசினாள்.

தலை முடி கலைந்து நெற்றியில் படிய பிடிவாதக்கார குழந்தை போல் அருகில் உறங்கிக் கொண்டிருந்தவனைத் திரும்பிப் பார்த்தவள், “இவனுக்காக எது தான் கூடாது ” , என்று புன்னகைத்துக் கொண்டாள் . காலை நேர பரபரப்பில் இருந்தவன் , அவள் முகம் பார்ப்பதும் , தயங்குவதுமாய் இருந்தான் . மௌனமாய் சிரித்துக்கொண்டவள் , “நேரமாச்சு தங்கம் ..சீக்கிரம் சாப்பிட வா .. அப்புறம் ரோடுல போறவன எல்லாம் கத்திகிட்டே டிரைவ் பண்ணுவ” என்றாள்.

சாப்பிட அமர்ந்தவன் ஏதோ யோசனையோடு இருப்பதைக் கவனித்தவள் , ” மெல்ல அருகில் வந்து அவனைத் தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள் , ” என் பெரிய பிள்ளை ஆசை படறதால , நானும் என் சின்ன பிள்ளையும் விசேஷத்துக்கு வரோம் ..இப்போ சந்தோஷமா “என்றாள் . இது தான் அவள் ..அவன் முகம் வாட சகிக்காதவள் . அவள் விருப்பங்களை விட , அவளது உணர்வுகளை விட, அவனை அதிகமாய் நேசிப்பவள். அவளை எத்தனையோ மனம் நோக பேசியவர்களையும், அவனது உறவினர் என்பதால் மன்னிக்கக் கற்றவள்.

அவளைப் பெற்றவரே என்றாலும் அவனை ஏற்றுக்கொள்ளாதவரை பிரிந்து நிற்பவள் .

மௌனமாய் அவளை நிமிர்ந்து பார்த்தவன் , “உனக்கு கஷ்டமா இல்லையா டா ” என்றான் .

“ம்ஹூம் ..என் தங்கத்தோட கௌரவம் அத விட பெருசு” என்று சிரித்தவளின் வயிற்றில் கண்ணீருடன் முகம் புதைத்துக் கொண்டான் .

வளைகாப்பு விழாவுக்கு வந்தவர்களைக் கண்டவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள் .எதையும் கண்டு கொள்ளாமல் அவன் கை பற்றி நடந்தாள் .

“எத்தனை மாசம் ” மாமியார் யாரிடமோ கேட்பது போல் கேட்டாள் .

” மசக்கை எல்லாம் குறைஞ்சிருக்கா?”, அவனது அண்ணன் மனைவி பட்டும் படாமல் விசாரித்தாள் .

“கட்டிக்கிட்டு வந்தது சரி இல்லனாலும் , கூட பிறந்தவன விட்டு குடுக்க முடியுமா ?”, அவனது அக்கா தன் குணம் காட்டினாள் .

அவன் கை இறுக்கத்தில் அவனது மன இறுக்கம் உணர்ந்தவள், ஒன்றும் பேசாதே என்பது போல் தலை அசைத்தாள் . குரல் கரகரக்க ” நாம வந்தது தப்பு குட்டிமா .. என்னை மன்னிச்சிரு ” என்றவனிடம் , ” விடு தங்கம் ..நான் ஒன்னும் நினைச்சிக்கல ” என்று புன்னகைத்தாள் .

வளைகாப்பு தொடங்கியது . 9 மாத வயிற்றோடு பம்மி நடந்து வந்த வசந்தி , இவளை பார்த்ததும் திகைத்துப் பின் புன்னகைத்தாள் .

வயதில் மூத்த சுமங்கலிகள் வளையல் அடுக்க ஆரம்பித்தார்கள் .

“பொண்ணு கழுத்துல அட்டியலை காணோம்.. ஏண்டீ வசந்தி ..இன்னும் உங்க அப்பனுக்கு காடு விளையலியா ??? கல்யாணத்துல போட வேண்டிய 5 சவரன் .. இன்னும் காணலியே .. பகுமானமா வளையலை அடுக்கிட்டு உக்கார்ந்திருக்கான் ..” வசந்தியின் மாமியார் தன் கட்டைகுரலில் நடுசபையில் பிலக்கணம் படித்தாள்.

பெண்ணை பெற்றவர்களின் முகத்தில் இருள் படிந்தது .

” அது வந்து..அம்மா..” வசந்தியின் அம்மா ஏதோ சொல்ல வந்தாள் .

நொடியில் முடிவெடுத்த பூரணி, கண் இமைக்கும் நேரத்தில் தன கழுத்தில் இருந்த 8 சவரன் நகையை கழற்றினாள் .

அவன் கையை பிடித்து இழுத்தக் கொண்டு முன்னாள் வந்தவள் , ” அவரிடம் புது டிசைனா பார்த்து வாங்கிட்டு வர சொல்லிட்டு , நகையை போடும் முன்னமே மறந்து போயி மனையில் உக்கார வச்சிட்டீங்களா அண்ணி ” என்று காலம் காலமாய் பழகியவள் போல் கேட்டபடி வசந்தியின் கழுத்தில் நகையை அணிவித்தாள்.

மற்றவர் சொல் பொறுக்காமல் அவள் ஓரமாய் இருந்தது அவளது நகையை யாரும் பார்த்து இருக்க முடியாமல் தடுத்திருந்தது .

வசந்தியின் பிறந்த வீடு ஏதும் சொல்லும் முன்னர் , ” வா வசந்தி …உனக்கு டிசைன் பிடிச்சிருக்கா ” என்று இயல்பாய் பேசியபடி அவள் கை பற்றி ” காட்டி கொடுத்து விடாதே ” என்று அவசரமாய் முணுமுணுத்தாள் .

மாமியார் நகையின் அழகில் ஆழ்ந்து விட ,அவனது வீட்டினரின் கண்ணீர் யார் கவனத்திலும் படாமல் தப்பியது .

விழா முடியும் வரை சிரித்த முகமாய் நின்றிருந்தவள் , துளி தண்ணீர் கூட அருந்தாமல் அவன் கை பிடித்து வெளியேறினாள்.

மௌனமாய் அவளைப் பார்த்தவனின் கண்களில் வழிந்த காதல் , “நான் கொள்ளும் கர்வம் நீ” என்றது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *