
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஜூன் 1-ம் தேதி கட்சிப் பொதுக்குழுவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல், அதற்கு போட்டியாக அதிமுக கவுன்சிலர்கள் துணையுடன் மாநகராட்சி கூட்டத்தை நடத்தியதற்கு மூளையாக செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆரம்பம் முதலே மோதல்.. மதுரை மாநகராட்சி திமுக மேயராக இந்திராணி இருந்து வருகிறார். இவர் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இந்திராணி மேயரான நாள் முதல், தற்போது வரை இவருக்கும் பெரும்பான்மை திமுக கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்களுக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரே ஒரு மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி மட்டும் மேயர் இந்திராணி ஆதரவாளராக இருந்து வருகிறார்.