• May 29, 2025
  • NewsEditor
  • 0

‘விண்வெளி நாயகன்’ முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பயோபிக் ‘கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ படத்தில் தனுஷ் நடிப்பது வரவேற்பையும் குவித்தாலும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.  

இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளியாகும் படத்தில் ‘அப்துல் கலாம்’ என அவரது முழுப் பெயரை வைக்காமல், வெறும்  ‘கலாம்’ என வைத்திருப்பதில் அரசியல் இருக்கிறது என்றும் அவரது இஸ்லாமியர் அடையாளத்தையே மாற்றும் செயல் என்று சமூக வலை தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அப்துல் கலாம் அண்ணன் மகனும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஃபவுண்டேஷனின் இணை நிறுவனருமான ஏ.பி.ஜே.எம்.ஜே ஷேக் சலீமிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்.

Dhanush – APJ Abdul Kalam Biopic (AI Genrated)

“உங்கள் தாத்தா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பயோபிக் எடுக்கப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தினரிடம் அனுமதி பெறப்பட்டதா?”

“எங்க தாத்தா அப்துல் கலாம் பயோபிக் கொண்டு வர்றது ரொம்ப நல்ல விஷயம். தாத்தா கலாமா, தனுஷ் சார் நடிக்கிறது ரொம்பவே சந்தோஷம். இந்த படத்தோட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் என்னோட நீண்டகால நண்பர்தான். கடந்த 2017-ம் ஆண்டிலேயே  ‘கலாம்’ படத்தை உருவாக்கணும்னு ராமேஸ்வரம் வந்து எங்களைச் சந்திச்சார். அதுக்கப்புறம், அடுத்தடுத்து நடந்த சந்திப்புகளில் ஹைதராபாத்தில் மீட் பண்ணினோம். எங்க தாத்தா கலாம் எல்லோருக்குமான தலைவர். இந்தியாவுல அதிகமா இருக்கிறது மாணவ மற்றும் இளைஞர் சமுதாயம்தான்.

அவர்களைத்தான், முன்னேற்றணும்னு கனவு கண்டுகொண்டிருந்தார். அவர்களால்தான், நாடு முன்னேற்றம் அடையும்னு பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது கனவைப் பின்பற்றி, எத்தனையோ லட்சக்கணக்கான மாணவர்கள் சாதிச்சிக்கிட்டிருக்காங்க. அத்தனை பேருக்கும் தாத்தா வழிகாட்டியா இருந்திருக்கார். ஜனாதிபதியா மட்டுமில்லாம, ஒரு சைன்ட்டிஸ்ட்டா அவருடைய பங்கு ரொம்ப முக்கியமானது. திருமணமே பண்ணிக்காம நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டவர். அவரைப்பற்றி பயோபிக் என்பது எப்பேர்ப்பட்ட விஷயம்னு நான் சொல்லத் தேவையில்ல. அவர், மறைந்தாலும் அவருடைய பயோபிக்கை பார்த்துட்டு இன்னும் அவருடைய கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றப் புறப்படுவார்கள். அதனாலதான், நாங்க இதற்கு சந்தோஷமா அனுமதி கொடுத்தோம்!”

தாத்தா அப்துல் கலாமுடன் பேரன் ஷேக் சலீம்

“அப்துல் கலாமாக தனுஷ்! உங்கள் பார்வையில் பொருத்தம் எப்படி?”

“தனுஷ் ரொம்பவே பொருத்தமா இருக்கார். கலாம் பயோபிக் எடுக்கலாம்னு முடிவு பண்ணினபோதே யாரை அந்த வேடத்தில் நடிக்க வைக்கலாம்னு கலந்தாலோசிச்சோம். இளம் வயதிலிருந்து கடைசி காலம்வரை அவருடைய வாழ்க்கையைக் காண்பிக்கணும்னு யோசிச்சப்போ அதுக்கேற்றமாதிரி நடிகர் தேவைப்பட்டார். அந்தத் தேடலுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அதுக்கப்புறம்தான், தனுஷ் பொருந்திப் போனதை உணர்ந்தோம்.

அதாவது, இளமை -முதுமைன்னு ரொம்ப பொருத்தமா இருந்தார். எல்லா காலகட்டத்துக்கும் சரியான எக்ஸ்பிரஷனைக் கொடுப்பார். தனுஷ் ஹாலிவுட் படங்களில் நடிச்சிருக்கார். தேசிய விருது எல்லாம் வாங்கியிருக்கார். ரொம்ப திறமையான நடிகர். இந்திய மக்களுக்கு நன்கு பரிச்சயமான முகம். கலாமா அவர், நடிக்கும்போது எல்லா மக்கள்கிட்டேயும் எளிதா போய்டுவார். அதேமாதிரி, அவருக்கு தாத்தா கலாமோட முக ஜாடை, உருவ ஒற்றுமை 90 சதவிகிதம் அப்படியே இருக்கு. உண்மையிலேயே தாத்தா கலாமை அப்படியே தத்ரூபமா பார்ப்பீங்க!”

“அப்துல் கலாமின் முழுப்பெயரை தலைப்பாக வைக்காமல், வெறும் ‘கலாம்’ என இஸ்லாமிய அடையாளத்தை மறைத்து தலைப்பு வைத்ததில் அரசியல் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளதே?”

“என் தாத்தா கலாம் அனைவருக்கும் பொதுவானவர். கலாம் என்றால் நாலேஜ் அதாவது அறிவு என்று அர்த்தம். அதனால், வெறும் கலாம் என்று வைப்பதில் தவறில்லையே? அதுவும், உலக அளவில் படத்தைக் கொண்டு செல்வதால், கலாம் பெயர் கேட்சியாக இருக்கும்.

ஷேக் சலீமுடன் அப்துல் கலாம்

இது தாத்தா அப்துல் கலாம் பயோபிக் என்பதுதான் எல்லோருக்கும் தெரியுமே? அதனால்தான், ‘கலாம்’ டைட்டிலை வைத்திருக்கிறோம். அதேபோல், எங்க வீட்டின் பெயரே ‘House of Kalam’ என்றுதான் இருக்கும், ‘House of Abdul Kalam’ என்று இருக்காது. அதுதான், எங்களோட பிராண்ட். அதனால்தான், அந்த டைட்டிலையே பயன்படுத்த அனுமதி கொடுத்தோம். இதில், எந்த அரசியல் சதியும் உள்நோக்கமும் இல்லை!”

“உங்களுக்கும் தாத்தாவுக்குமான பாண்டிங்?”

“நான் சிறுவனாக இருக்கும்போது கலாம் தாத்தா ராமேஸ்வரம் வந்து போயுள்ளார். ரொம்ப அன்பானவர். ஆனால், தாத்தா எப்போதும் பிஸிதான். குடும்பத்தைவிட நாடும் நாட்டு மக்களும்தான் முக்கியம். நாட்டின் முன்னேற்றத்தைத்தான் கனவாக கொண்டிருந்தார். அதனால்தான், தன் குடும்பத்தினரைப் பக்கத்தில் வைத்துக்கொள்ளாமல் தனியாக வாழ்ந்தார். அப்படிப்பட்ட தாத்தாவுடன் 7 வருடம் பயணிக்கும் பாக்கியம் கிடைத்தது. எனக்கும் அவருக்குமான உறவு ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு போன்றதுதான்.

அப்துல் கலாம்

என்மீது ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தார். நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுத்திருக்கார். அவர் எப்படியோ, அப்படித்தான் பொன்ராஜ் சாரும். நல்ல வழிகாட்டி. இவர்களிடம் கற்றுக்கொண்டதை வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வருகிறேன். கலாம் தாத்தா இருக்கும்போதே, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஃபவுண்டேஷனை 2015-ல் உருவாக்கினோம். அந்த ஃபவுண்டேஷன் மூலம் மாணவ சமூகத்தை அறிவியல் பங்கெடுப்புகளில் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். பெண்கள் முன்னேற்றத்திற்கும் பணியாற்றி வருகிறோம். என் கடைசி காலம் வரை தாத்தாவின் கனவை நிறைவேற்றுவேன்!”

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *