
“50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறும் வித்தையை தெரிந்து வைத்துள்ள மருத்துவர் அய்யா, மகனையும் கட்சியையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தையை படிக்க மறந்துவிட்டாரே” – பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் அதிகார யுத்தத்தை அரசியல் வட்டாரத்தில் இப்படித்தான் பேசுகிறார்கள்.
பாமக பொதுக்குழுவில், தனது மகள் வழி பேரனை பாமக இளைஞர் சங்க தலைவராக ராமதாஸ் அறிவித்ததில் வெளிப்படையாக வெடித்த அப்பா – பிள்ளைக்கான அதிகார யுத்தம் இருக்க இருக்க உக்ரமாகிக் கொண்டே தான் போகிறது. இந்த நிலையில், தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் காட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை அழைத்து ராமதாஸ் நடத்திய ஐந்து ஆலோசனைக் கூட்டங்களும் பிசுபிசுத்துப் போய்விட்டன. கட்சிக்குள் இனி அன்புமணி தான் எல்லாமே என தெளிவாக தெரிந்து போனதால் பெருவாரியான நிர்வாகிகள் தோட்டத்து ஆலோசனைக் கூட்டங்களை தைரியமாகப் புறக்கணித்து விட்டனர். இதில் 3 எம்எல்ஏ-க்களும் உள்ளடக்கம்.
தனது ஆலோசனை கூட்டத்துக்கு வராமல் புறக்கணிப்பவர்களை தயவு பார்க்காமல் பொறுப்பிலிருந்து நீக்கும் முடிவில் தான் ராமதாஸ் முதலில் இருந்தாராம். ஆனால், சுமார் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புறக்கணித்ததால், கட்சி நலன் கருதி யாரையும் கைவைக்க முடியாமல் பொறுமை காக்கிறாராம் மருத்துவர். அதேசமயம், வெளிப்படையாகப் பார்த்தால் இது அதிகாரப் போட்டியாக தெரிந்தாலும் உள்ளுக்குள் வேறு பல கணக்குகளும் ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.