
‘நல்ல நிலையில் ஆர்சிபி!’
ஐ.பி.எல் ப்ளே ஆப்ஸூக்குள் நுழைந்து நிற்கிறது ஆர்சிபி. இன்று பஞ்சாபுக்கு எதிராக முதல் தகுதிச்சுற்றுப் போட்டியிலும் ஆடவிருக்கிறது. ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது பெங்களூருவுக்கு நீண்ட நாள் கனவு. இதுவரை அது சாத்தியப்படவே இல்லை. இந்த முறை ஆர்சிபிக்கு சாதகமாக எல்லாமே கூடி வருவதுபோல இருக்கிறது.
நல்ல அணி, தலைமையேற்ற மாத்திரத்திலேயே பக்குவத்தோடு வழிநடத்தும் கேப்டன், மேட்ச் வின்னர்கள் என அந்த அணி முழுக்க நேர்மறையான அம்சங்களால் நிரம்பியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் விராட் கோலி உச்சகட்ட பார்மில் இருக்கிறார். வேறு எதற்காக இல்லையெனினும் விராட் கோலிக்காக அந்த அணி கோப்பையை வென்றே ஆக வேண்டும். ஏனெனில், இந்த அணிக்காக விராட் கோலி அவ்வளவு உழைத்திருக்கிறார்.
‘கோலியும் ஆர்சிபியும்!’
அணிக்கும் வீரருக்கும் இடையே ஒரு பிரிக்க முடியாத பிணைப்பு இருக்க வேண்டும். ஒரு வெற்றிகரமான அணிக்கு அது ரொம்பவே முக்கியம். தோனியை சென்னை அணி எப்போதுமே விட்டுக்கொடுக்காது. எந்த மாதிரியான சூழலிலும் அவருக்கு பக்கப்பலமாக நிற்கும். அதேமாதிரி தோனியும் சென்னை அணியை விட்டுக்கொடுக்க மாட்டார்.

அந்த தோனிகூட இரண்டு ஆண்டுகள் வேறொரு அணிக்காக ஆட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், விராட் கோலி 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காகத்தான் ஆடியிருக்கிறார். 2008 இல் கோலி 19 வயதுக்குட்பட்டோருக்கான கோப்பையை வென்றுவிட்டு வருகிறார். கோலி டெல்லியைச் சேர்ந்தவர். அதனால் டெல்லியை மையமாகக் கொண்ட ஐ.பி.எல் அணிதான் அவரை ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டெல்லி அணி கோலிக்கு பதிலாக ஒரு டெல்லி பௌலரை ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த சமயத்தில் பெங்களூரு அணி கோலி மீது நம்பிக்கை வைத்து தங்கள் அணிக்குள் கொண்டு வருகிறது. அங்கிருந்துதான் ஒரு நீண்ட நெடிய சகாப்தமே தொடங்கியது.
கோலி ஒரு கொடூர பசி கொண்ட மிருகம். அப்போதைய 20 வயது கோலியும் அப்படித்தான். இப்போதைய 36 வயது கோலியும் அப்படித்தான். நன்றாக நினைவிருக்கிறது. ஆர்சிபியின் ஆரம்பக்கட்டத்தில் ஒரு சீசன். கோலி மிக இளம் வீரர். ஒரு போட்டியில் கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கும் ஒரு பவுண்டரி தேவைப்படும்.

கோலியின் அரைசதத்துக்கும் ஒரு பவுண்டரி தேவைப்படும். ஆனால், கோலியால் அதை எடுத்துக்கொடுக்க முடியாது. அப்படியே தலையில் கை வைத்து மைதானத்திலேயே அமர்ந்துவிடுவார். விரக்தியின் உச்சத்துக்கே சென்ற அந்த இளம் கோலிதான் இப்போது பெங்களூரு அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரர். பெங்களூருவுக்கு மட்டுமில்லை. ஐ.பி.எல் லிலேயே அவர்தான் அதிக ரன்களை எடுத்திருக்கிறார்.

8 சீசன்களில் 500+ ரன்கள். 5 சீசன்கள் 600+ ரன்கள். உச்சகட்டமாக கையில் அடிபட்டு தையலோடு ஆடி 2016 சீசனில் 973 ரன்களை அடித்திருப்பார். அதுதான் கோலியின் கரியர் உச்சம் மொமன்ட். இப்போது கோலி தன்னுடைய 30 களில் இருக்கிறார். டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்து ஓராண்டு ஆகிவிட்டது. டெஸ்ட் போட்டிகளிலும் போதுமென்ற மன நிலைக்கு வந்துவிட்டார். ஆனாலும் கடந்த 3 சீசன்களிலும் 600 + ரன்களை அடித்திருக்கிறார். கடந்த சீசனின் ஆரஞ்சு தொப்பி வின்னர் அவர்தான். இந்த ஆண்டும் அந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார்.
‘அணியின் ஒற்றை நம்பிக்கை!’
ஆர்சிபியின் ஆரம்பகட்டம் என்று ஒன்று உண்டு. முதல் 3-4 சீசன்கள் என்று கூட சொல்லலாம். அப்போது கோலி வளர்ந்து வரும் வீரர். அந்த சமயத்தில் கோலி மீது நம்பிக்கை இருந்தது. கோலியும் சில நல்ல ஆட்டங்களை ஆடினார். ஆனால், அணியின் மொத்த சுமையும் அவர் மீது இல்லை. அத்தனை பாரத்தையும் முதுகில் சுமக்கவேண்டிய ஒரு காலமும் இருந்தது.

கெய்ல், டீ வில்லியர்ஸ், கோலி என ஒன்றிரண்டு வீரர்கள் மட்டுமே அந்த அணியின் பலமாக இருந்த காலம் இருந்திருக்கிறது. அதிலும் கோலிக்கு ஒரு கூடுதல் சுமையாக கேப்டன்சியும் அவர் தோளின்மீது இருந்தது. ஒரு பக்கம் உயிரைக் கொடுத்து அணிக்காக ரன்கள் சேர்த்துக்கொடுக்க வேண்டும். அதிலும் இந்த உலகம் ஏனோ கோலியிடம் மட்டும் முழுக்க முழுக்க 100% ரிசல்ட்டை எதிர்பார்க்கும். அந்த ரிசல்ட்டை இயந்திரத்தால்கூட கொடுக்க முடியாது. அந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்லவேண்டும்.
அதன்பிறகு ஒவ்வொரு சீசனிலும் தோற்று வெளியேறுவதற்கும் பதில் சொல்ல வேண்டும். அணியின் தோல்விகளில் கோலிக்கு பங்கில்லை என கூறவில்லை. கோலிக்கும் அதில் பங்கிருக்கிறது. ஆனால், தன்னால் இயன்ற அத்தனையையும் அணிக்காக செய்தார். இன்னமும் பாருங்கள். 36 வயதில் பல்லைக் கடித்துக் கொண்டு நரம்புகள் புடைக்க களத்தில் அதி தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதில் அவர் என்றைக்குமே குறை வைத்ததில்லை.

‘ரசிகர்களை ஈர்க்கும் காந்தம்!’
தோல்விகள் அவரை ஒரு மூலையில் தள்ளியதில்லை, முடக்கிப் போட்டதில்லை. சொல்லப்போனால் இத்தனை சீசன்களாக கோப்பைகள் இல்லாதபோதும் அந்த அணிக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதற்கும் கோலிதான் காரணம். கோலி நவீன தலைமுறையின் பிரதிநிதியாக இருக்கிறார். அவர்களைப் போன்றே வெளிப்படையாக தன்னுடைய உணர்வுகளைத் திரையிட்டுக் காட்டுகிறார்.

வென்றுகாட்ட வேண்டும் என்கிற வெறியை இன்னமும் பொதிந்து வைத்திருக்கிறார். இதெல்லாம்தான் அந்த அணியை நோக்கி ரசிகர்களை இன்னமும் ஈர்க்கிறது. பெங்களூருவின் முகமாக கோலி இல்லாமல் வேறு எதாவது வீரர் இருந்திருந்தால் இதெல்லாம் சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.
உழைப்பைத் தாண்டி ஆட்டத்தைத் தாண்டி வெற்றி பெறுவதற்கு சில சூட்சுமங்களும் சமயோஜிதமும் கூட தேவை. அதுதான் கோலிக்கு சிக்கவே இல்லை. அந்த சூட்சமங்கள் பொருந்திய வேறெதோ அணியில் கோலி வீரராக இருந்திருந்தால், இந்நேரம் அந்த அணி பல முறை சாம்பியன் ஆகியிருக்கும். ஆனாலும் அவருக்கு பெங்களூரு அணியின் மீது ஒரு பிடிப்பு இருந்தது. அதனால்தான் இன்னமும் அதே அணியில் நீடிக்கிறார்.

இடையில் சில பெரிய அணிகளெல்லாம் கூட அவரை இழுக்க முயன்ற கதையெல்லாம் கூட உண்டு. எதற்கும் கோலி பிடிகொடுக்கவில்லை.
இத்தனைக்கும் கோலி இந்திய அணியின் கேப்டன் பதவியை இழக்க ஐ.பி.எல் லும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. விராட் கோலி ஒன்றும் அத்தனை மோசமான கேப்டன் எல்லாம் இல்லை. கோலியின் காலத்தில்தான் இந்திய அணிக்கென தனி குணாதிசயம் கிடைத்தது. வெளிநாட்டு அணிகள் இந்திய அணியைப் பார்த்து மிரளத் தொடங்கின.
அதேநேரத்தில் கோலியிடம் எந்த கோப்பையும் இல்லை. அதே சமகாலத்தில் ரோஹித் சர்மா ஐ.பி.எல் இல் கோப்பைகளாக வென்று குவித்துக் கொண்டிருந்தார். அதனால்தான் கோலியை வம்படியாக நீக்கிவிட்டு ரோஹித்தை கேப்டனாக்கினார்கள். கோலியும் அந்த 2020-21 காலக்கட்டத்தில் ஐ.பி.எல் யை வென்றிருந்தால் இவ்வளவு வேகமாக முரண்டாக அவரின் பதவியை பிசிசிஐ பறித்திருக்காது என்பதே உண்மை.

ஆர்சிபியால் கோலி இழந்தது அதிகம். எதிர்கொண்ட விமர்சனங்கள் அதிகம். அணிக்காக அவர் கொட்டிய உழைப்பு அதிகம். ஆனால், அதற்கெல்லாம் ஈடாக அவர் திரும்பப்பெற்றது குறைவு. கோலி செய்த பணிகளுக்கெல்லாம் அவரை சிகரத்தில் தூக்கி வைத்து கோப்பையை கையில் கொடுத்து அழகு பார்க்கும் நேரம் இது. எல்லாமே கூடி வருகிறது. இந்த வாய்ப்பை கோட்டைவிட்டு விடாதீர்கள் ஆர்சிபி!