
சென்னை: கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்தால் மட்டுமே அந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2018-2019, 2019- 2020 ஆகிய நிதியாண்டுகளில் நன்கொடை குறித்த அறிக்கை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.