
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ளது மறையூர். இங்குள்ள பனந்தோட்டத்தில் மாசாணம் சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் இக்கோயில் திருவிழா நடைபெறும். திருவிழாவிலும், திருவிழாவை முன்னிட்டு நடக்கும் அசைவ விருந்திலும் ஆண்கள் மட்டுமே பங்கு கொள்வார்கள்.
தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் வகையில் கிடா, சேவல்களை காணிக்கையாக செலுத்துவார்கள். நள்ளிரவில் கறிசோற்றினை மண் சட்டியில் வைத்து மண் சட்டியுடன் வானத்தை நோக்கி நடைபெறும் எரி பூஜை நடைபெற்றது. எரி பூஜைக்குப் பிறகு கிடாக்கள், சேவல்கள் வெட்டப்பட்டு வெட்டப்பட்ட குழிக்குள் ரத்தம் விடப்பட்டது.
பின்னர், அந்த ரத்தக்குழியை மூடினர். 20 அண்டாக்களில் சாதம் சமைக்கப்பட்டது. அதிகாலை 5 மணியில் இருந்தே விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரண்டனர்.

மதியம் 12 மணிக்குள்ளேயே விருந்து நிறைவடைந்தது. விருந்து முடிவடைந்ததும் எஞ்சியுள்ள சாதம், கிடா குழம்பு, சேவல் கறி ஆகியவற்றை ஊர் எல்லையில் தோண்டப்பட்ட குழியில் போட்டு மூடப்பட்டது. மதுரையைச் சேர்ந்த பக்தர் கருப்பசாமியிடம் பேசினோம், “வைகாசி மாதம் என்றாலே எங்களுக்கு மாசணம் சுவாமி கோயில் திருவிழாதான் நினைவுக்கு வரும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவிற்கு நண்பர்களுடன் தவறாமல் வந்துவிடுவோம்.
ஊர் மக்கள் அனைவரும் தரையில் அமர்ந்து உண்ணும் இந்த விருந்தின் சுவைக்கு எல்லையே இல்லை. மாசாணம் சுவாமியை மனமுருகி வேண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பொருள் திருட்டு, வழக்குகளில் இழுபறி, இரு தரப்பு சண்டை உள்ளிட்ட பிரச்னைகள் தீர இக்கோயிலில் மாசாணம் சுவாமி முன்பு நிற்க வைத்து பிரச்னைகளை முடித்துவிடுவார்கள்.

தொழில் மற்றும் வியாபார ஒப்பந்தங்கள்கூட இந்த சுவாமி முன்பு பேசி முடிக்கப்படுகிறது. பல ஊர்களில் இருந்தும் பைக்குகளிலும் கார்களிலும் இக்கோயிலுக்கு படையெடுத்து வந்துள்ளார்கள். 1 கி.மீ தூரத்திற்கு வரிசையாக அமர வைத்து பசியாற விருந்து வழங்கப்பட்டுள்ளது” என்றார்.