• May 29, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியின் ‘தி.மு.க எம்.எல்.ஏ சண்முகையாவிற்கு, சிலைக் கடத்தலில் தொடர்பு இருப்பதாக’ பரவிய செய்தி, கட்சி மேலிடம் வரையில் எட்டிவிட்டதாம். தொகுதிப் பொறுப்பாளரான கனிமொழியிடம், ‘இந்த வழக்கு தொடர்பாக சண்முகையாவிடம் விசாரியுங்கள்…’ என மேலிடம் உத்தரவிட, அவரும் சமீபத்தில் விசாரித்திருக்கிறார்.

சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாகப் பல கேள்விகள் கனிமொழி தரப்பில் கேட்கப்படவும், சண்முகையாவுக்கு வியர்த்துக் கொட்டிவிட்டதாம். இந்த நிலையில், ‘சண்முகையா மீது வதந்தி பரப்பப்படுகிறது’ என அவர் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள், மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் மனு அளிக்க முடிவுசெய்துள்ளார்களாம். அதற்கான பணியை சண்முகையாவின் உறவுப்புள்ளி ஒருவர்தான் ஒருங்கிணைத்து வருகிறாராம்!

ஜில் மாவட்டத்தில், மே மாதத் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து அரசு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில், அரசு அதிகாரிகளுடன் அந்தந்தத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மேடை ஏறுவதும் வழக்கம். ஆனால், நுழைவு வாயில் நகரம் முதல் கடைக்கோடி ஏரியாவில் நடக்கும் அரசு விழா வரை ஒன்று விடாமல், வாலன்ட்ரியாக மேடை ஏறி வருகிறாராம் ஆளுங்கட்சியின் மாவட்டப் புது தலைமைப் புள்ளி.

ஆரம்பத்தில் மக்கள் பிரதிநிதிகளுடன் சேர்ந்து தயங்கித் தயங்கி மேடையேறிய மனிதர், அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றதும், தற்போது தைரியமாக சீட் போடச் சொல்லி மேடையை ஆக்கிரமித்து வருகிறாராம். ‘மக்கள் வரிப்பணத்தை வைத்து அரசு விழா நடத்துகிறீர்களா… இல்லை, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்களா..?’ எனக் கொந்தளித்து வருகிறார்கள் எதிர்க் கட்சியினர்!

மலர்க் கட்சியின் ஸ்ட்ராங் புள்ளி, தன் கட்சிப் பதவியை இழந்த பின்னரும்கூட, வசூலை நிறுத்தவில்லையாம். அவர் பொறுப்பில் இருந்தபோதே மான்செஸ்டர் மாவட்டத் தொழிலதிபர்களிடம் எக்கச்சக்கமாக வசூல் செய்ததாகப் புகார் எழுந்தது. இப்போது பொறுப்பில் இல்லாத நிலையில், கர்நாடகாவிலிருக்கும் தனக்கு நெருக்கமான நபர்கள் மூலமாக, மான்செஸ்டர் மாவட்டம் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டத் தொழிலதிபர்களிடம் பேசுகிறாராம். ‘உங்களுக்கு இருக்கும் சிக்கலை, டெல்லியில் பேசி நான் நிவர்த்தி செய்துதருகிறேன்’ எனச் சொல்லிச் சொல்லியே, இப்போதும் ஜரூராக வசூலை நடத்துகிறாரம் அந்த ஸ்ட்ராங் புள்ளி!

வரும் ஜூன் 1-ம் தேதி, தி.மு.க-வின் பொதுக்குழு மதுரையில் நடைபெறவுள்ளது. அதற்கான பிரமாண்ட ஏற்பாட்டை செய்துவரும் அமைச்சர் மூர்த்தி, தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார். கடந்த மே 23-ம் தேதி, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டத்தை உத்தங்குடியில் அவர் நடத்தியபோது, அதேநாளில் மாமன்றக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் மேயர் இந்திராணி. மொத்தமுள்ள 100 கவுன்சிலர்களில் தி.மு.க கவுன்சிலர்கள் 53 பேர் உட்பட பலரும் மாமன்றக் கூட்டத்துக்கு வரவில்லை. தயார் செய்த 46 தீர்மானங்களை நிறைவேற்ற, மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும் என்பதால், மெதுவாகவே நடந்திருக்கிறது கூட்டம்.

செயல்வீரர் கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்களை மேயர் தரப்பில் அழைத்தபோது, ‘இந்த நேரத்தில் யாரைக் கேட்டு மாமன்றக் கூட்டத்தைக் கூட்டினீர்கள்’ என்று அமைச்சர் தரப்பில் சத்தம் போட்டிருக்கிறார்கள். பிறகு கூட்டம் முடியும் நேரத்தில் ஒருசில தி.மு.க கவுன்சிலர்கள் வந்துசேர, எதிர்கட்சி கவுன்சிலர்களின் உதவியுடன் தீர்மானத்தை ஒருவழியாக நிறைவேற்றியிருக்கிறார் மேயர். இவ்விவகாரம் தொடர்பாக, மேயர்மீது கட்சித் தலைமையிடம் புகாரைப் பதிவுசெய்துள்ளதாம் மூர்த்தி தரப்பு!

கதைசொல்லியார் கட்சியிலிருந்து விலகிய ‘தங்கை’த் தலைவி, பனையூர்க் கட்சியில் ஐக்கியமாகும் எண்ணத்தில், கடந்த ஆண்டே அக்கட்சியின் முக்கியப் புள்ளிகளைச் சந்தித்தார். ஆனால், ‘அவரைச் சேர்ப்பதால் நமக்கு என்ன பயன்..?’ என பனையூர்க் கட்சியில் நடந்த ஆலோசனையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. போதாதக்குறைக்கு, `அவரைச் சேர்த்தால் உங்களையே காலி செய்துவிடுவார்…’ எனக் கதைசொல்லியாரே போன் போட்டு பனையூர்ப் புள்ளிகளை எச்சரிக்கை செய்யவும், இணைப்புக்கான கதவு இழுத்து மூடப்பட்டது. இந்தச் சூழலில், மலர் – இலைக் கூட்டணியிலும், ‘கதைசொல்லியார் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளை, இப்போதைக்கு இணைக்க வேண்டாம்’ என முடிவு எடுக்கப்பட்டிருப்பதால், முன்னாள் ‘தங்கை’க் தலைவி தவிக்க, அதில் ரொம்பவே குஷியாகியிருக்கிறாராம் கதைசொல்லியார்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *