
அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாத இடத்தில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம், நர்சரி, மூலிகைத் தோட்டம் அமைத்து அசத்தியிருக்கிறார். மாணவர்களைக் கொண்டு இந்த தோட்டங்களை பராமரித்து வருவதோடு, இதுவரை காய்கறித் தட்டத்தில் 100 கிலோ வரை கத்தரிக்காய்களை அறுவடை செய்து, பலருக்கும் கொடுத்திருக்கிறார்கள்.
புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
கரூர் மாவட்டம், புகழூரில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தான் இந்த அற்புத முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகவும், பசுமைப் பள்ளி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வரும் ஜெரால்டு ஆரோக்கிராஜ் தான் இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறார்.
மாணவர்களைக் கொண்டு கத்தரிக்காய் அறுவடையில் ஈடுப்பட்டிருந்த ஜெரால்டு ஆரோக்கியராஜிடம் பேசினோம்.
“இந்தப் பள்ளிக்கு ஆசிரியராக வந்ததும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாத 10 சென்ட் இடத்தில மாணவர்களைக் கொண்டு கத்தரி, பச்சை மிளகாய், தக்காளி உள்ளிட்ட நாட்டுரக காய்கறி விதைகளை விதைத்தோம். அதேபோல், பள்ளிக்கு முன்புறத்தில் 20 சென்ட் இடத்தில் லெமன் க்ராஸ், தூதுவளை, அகத்திக்கீரை, கரிசலாங்கண்ணி, ஆடாதொடா, துளசி உள்ளிட்ட 20 வகையான மூலிகைச் செடிகளை நட்டோம்.

இவை அனைத்துக்குக்கும் நீர் பாய்ச்ச சொட்டுநீர் அமைப்பை ஏற்படுத்தினோம். மாணவர்களைக் கொண்டு இந்த செடிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மக்கிப்போன குப்பைகளை உரமாக இட வைத்தோம். அதேபோல், செடிகளை பூச்சிகள் தாக்கினால், வேப்பம் எண்ணெயை ஸ்ப்ரே செய்தோம். செயற்கை உரங்களை கைப்பிடி அளவுக்குக்கூட பயன்படுத்தத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.
15 நாளைக்கு ஒருமுறை மாணவர்களைக் கொண்டு எல்லா செடிகளுக்கும் களை எடுக்க வைத்தோம். இன்னொருபக்கம், மாணவர்களுக்கு மரக்கன்றுகளை உருவாக்கும் நுட்பத்தைக் கற்றுத் தருவதற்காக ஆளுக்கு ஒரு வேப்பம் விதையை வழங்கினோம். அதாவது, 6 முதல் 9 – ம் வகுப்பு வரை படிக்கும் 55 மாணவர்களுக்கு ஆளுக்கு தலா ஒரு விதையைக் கொடுத்து, கவரில் மண், இயற்கை உரங்களை போட வைத்து, அவற்றில் விதைகளை அவர்களை விட்டே ஊன்ற வைத்து, அவரவர் மரக்கன்றுகளை அவரவர் கண்ணுங்கருத்துமாக வளர்க்க வலியுத்தினோம்.

அவர்களும் அவற்றை சிறப்பாக வளர்த்து, நர்சரியை உருவாக்கியிருக்கிறார்கள். படித்த பின், வேலைக்குப் போகும் மாணவர்களும் எக்காலத்திலும் இயற்கையை நேசிப்பதை குறைக்காமல் இருக்க, இந்த முயற்சி பயன்படும்.
இன்னொருபக்கம், இயற்கை காய்கறித் தோட்டத்தில் கடந்த மாதம் கடைசியில் கத்தரிக்காய் காய்ப்புக்கு வந்தது. முதல் அறுவடையில் 13 கிலோ வரை கிடைத்தது. அதை பள்ளி சத்துணவுக்கு பயன்படுத்திக்கொண்டோம். அடுத்து, இந்த மாதம் முதல் வாரத்தில் 10 கிலோ கிடைத்தது. அதை ஆசிரியர்களுக்கு வழங்கினோம்.

அதேபோல், கடந்த 15 – ம் தேதி கிடைத்த 20 கிலோ கத்தரிக்காயை புகழிமலை முருகன் கோயிலில் நடைபெற்று வரும் அன்னதானத்துக்கு வழங்கினோம். இதைத்தவிர, எல்லா மாணவர்களுக்கும் தலா ஒரு கிலோ கத்தரிக்காய் வழங்கினோம்.
தற்போது, ஆறு கிலோவுக்கு மேல் அறுவடை செய்துள்ளோம். இன்னும் இரண்டு மாதத்துக்கு மேல் அறுவடை செய்ய முடியும். அதேபோல், தக்காளிச் செடிகள் இப்போது தான் காய்க்கும் பருவத்துக்கு வந்துள்ளன.

விரைவில் அதிலும் அறுவடையைத் தொடங்கிவிடுவோம். அடுத்து, பச்சை மிளகாயும் அறுவடைக்கு வந்துவிடும். மாணவர்களிடம் இயற்கை குறித்த புரிதலும், இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வும் இதன்முலம் வந்திருக்கிறது.
இன்னும் அதிக காய்கறிகளை பயிரிட்டு..!
‘இந்த கத்தரிக்காயை சமைத்து சாப்பிட்டபோது, அவ்வளவு ருசியாக இருந்தது சார். எங்க பெற்றோர்களிடம் சொல்லி எங்க வீடுகளிலும் இயற்கை காய்கறித் தோட்டம் அமைக்க வலியறுத்தி வருகிறோம். எது, நல்ல உணவு என்ற அறிவு வந்திருக்கிறது’ என்று அனைத்து மாணவர்களும் ஒருமித்தக் குரலில் சொல்லும்போது தான், இந்த முயற்சி வெற்றிக்கோட்டை நோக்கி செல்வதை உணர முடிந்தது.

வகுப்பறையில் பாடம் எடுப்பதை விட, இப்படி இயற்கை குறித்த பாடம் எடுப்பது மாணவர்களுக்கு இன்னும் புரிதலை, தேடலை ஏற்படுத்தும். தொடர்ந்து, மாணவர்களை வைத்து இயற்கை முறையில் இன்னும் அதிக காய்கறிகளை பயிரிட்டு, மாணவர்களுக்கு வழங்கலாம் என்று இருக்கிறோம். இதன்முலம், நோயில்லாத மாணவச் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற வழிகாட்டலை ஏற்படுத்துகிறோம்” என்றார் மகிழ்ச்சிப் பொங்க!.