
திருச்சி மாவட்டம், மாத்தூர் கிராமம் சன்னாசிப்பட்டியைச் சேர்ந்த முத்து கருப்பு என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67).
இவர் திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், “மாத்தூர் கிராமத்தில் சர்வே எண் 187 உள் பிரிவு எண் 14B2A2 பட்டா எண் 3039 என்ற எண் கொண்ட 1.26/1/2 செண்டு நிலத்தில் உள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள 300 சீமை கருவேல மரங்களைக் கடந்த 9.5.2025 ஆம் தேதி அன்று யாருக்கும் தெரியாமல் அத்துமீறி நிலத்திற்குள் நுழைந்து சன்னாசிப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், தே.மு.தி.க திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான பாரதிதாசன் தனது ஆட்களை வைத்து முறைகேடாக வெட்டி விற்றுள்ளார்” என்று புகார் அளித்தார்.
ஆறுமுகம் அளித்த இந்தப் புகாரின் பேரில் நேற்று மாலை திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் தே.மு.தி.க திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பாரதிதாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.