
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முஸ்கான் என்ற பெண் தனது கணவனை காதலன் துணையோடு கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு வைத்தார். இச்சம்பவத்தை போன்ற மேலும் சில சம்பவங்களும் நடந்தன.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குர்னம் சிங் என்பவர் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்புர் அருகில் உள்ள நிகாஷன் என்ற கிராமத்தை சேர்ந்த ராஜ்விந்தர் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். இத்தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகள் உட்பட 3 குழந்தைகள் இருக்கின்றன.
குர்னம் சிங் விவசாயம் செய்து வருகிறார். காலையில் தோட்டத்திற்கு சென்றால் மாலையில் தான் வருவார். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்னம் சிங் என்பவரை ராஜ்விந்தர் கவுர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு காதலாக மாறியது. மூன்று ஆண்டுகளாக அவர்களுக்குள் திருமணம் தாண்டிய உறவு இருந்தது. இது குறித்து குர்னம் சிங்கிற்கு தெரிய வந்தது. உடனே தனது மனைவியிடம் இது குறித்து குர்னம் சிங் பேசிப்பார்த்தார். ஆனால் எதுவும் முடிவுக்கு வந்ததாக இல்லை.
இப்பிரச்னை போலீஸ் நிலையத்திற்கும் சென்றது. அங்கேயும் தீர்வு காணமுடியவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் தனது மனைவியை கிராமத்தினரை அழைத்து அவர்களது முன்னிலையில் தனது மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்துவைத்துவிட்டார்.

அதோடு மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் பொறுப்பையும் சத்னம் சிங்கிடம் ஒப்படைத்துவிட்டார். இது குறித்து குர்னம் சிங் கூறுகையில்,”எனது மனைவி மற்றும் அவரது காதலனால் எனது உயிர் மற்றும் சொத்துக்கு அச்சுறுத்தல் இருந்தது. பல இடங்களில் மனைவியின் காதலன் கணவனை கொலை செய்த சம்பவங்களை கேள்விப்பட்டு இருக்கிறேன். எனவே பயத்தில் எனது மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்துவைத்துவிட்டேன். இப்போது அவர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு இருக்க முடியும். நானும் உயிரோடு இருக்க முடியும்” என்று தெரிவித்தார். இதற்கு முன் உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் இரண்டு நாளில் மனைவி தனது காதலனை விட்டு விட்டு மீண்டும் கணவன் வீட்டிற்கே வந்துவிட்டார்.