• May 29, 2025
  • NewsEditor
  • 0

‘பரஸ்பர வரி’ என்று உலகில் இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் மீதும் இறக்குமதி வரியை விதித்து அதிர்ச்சியை தந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது அதிர்ச்சியோடு மட்டும் நின்றுவிடாமல், அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு உலக அளவில் பொருளாதாரத்தில் பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

உலகப் பொருளாதாரம் பெரியளவில் இறக்கம் காண, அமெரிக்காவும் பாதிப்புகளை சந்தித்தது. இதனால், பரஸ்பர வரி 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

பரஸ்பர வரியை அறிவித்த ட்ரம்ப்

1977-ல்…

ட்ரம்ப் இந்த வரி விதிப்பை ‘அவசர நிலை’க்கு கீழ் தான் கொண்டு வந்தார். இதற்கு 1977-ம் ஆண்டு சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ், கனடா, சீனா, மெக்சிகோ நாடுகளின் மீது வரி விதிக்கப்பட்டது மேற்கோள் காட்டப்பட்டது.

பிற நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு பெரியளவில் வரிகளை விதிக்கும் போது அந்த நாடுகள் மட்டும் பாதிக்காது. அமெரிக்காவும் பாதிப்படையும். காரணம், அமெரிக்கா மூலப்பொருள்களுக்கு பெரும்பாலும் பிற நாடுகளை நம்பியே இருக்கிறது.

இதனால், ட்ரம்பின் இந்த ஆணையை எதிர்த்து சில நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன.

நிறுவனங்கள் வாதாடியது என்ன?

இந்த வழக்கை நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நிதிமன்றம் விசாரித்தது. நிறுவனங்கள் வாதாடியதாவது…

“அமெரிக்க நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது தான் அவசர நிலையை பிரகடனப்படுத்தி வரி விதிக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப் அமெரிக்காவின் நிதி பற்றாக்குறையைக் காட்டி அவசரநிலையின் கீழ், வரி விதிப்பை மேற்கொண்டுள்ளார். ஆனால், அமெரிக்கா கிட்டத்தட்ட 49 ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையில் தான் இயங்கி வருகிறது”.

ட்ரம்ப்
ட்ரம்ப்

நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

இந்த வாதத்தை கேட்ட நீதிமன்றம், “ட்ரம்ப் தனக்கு உள்ள அதிகாரத்தை மீறி, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையை மாற்றுகிறேன் என்ற பெயரில் பொருளாதாரக் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். அவசர நிலையின் கீழ், ட்ரம்ப் பிற நாடுகளின் மீது வரிகளை விதிக்க முடியாது. வரி சம்பந்தமான விஷயங்களை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும். அதனால், இந்த வரி விதிப்பு நிறுத்தப்படுகிறது” என்று உத்தரவிட்டது.

ட்ரம்ப் தரப்பு என்ன சொல்கிறது?

“அமெரிக்க அதிபரின் வரி சட்டப்பூர்வமானதா… இல்லையா என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, நீதிமன்றம் அல்ல” என்று நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு ட்ரம்ப் அரசாங்கம் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *