Doctor Vikatan: ராஜஸ்தானைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு, ரத்த வகையை மாற்றிச் செலுத்தியதால் அவரும் அவரின் கருவிலிருந்த குழந்தையும் உயிரிழந்ததாக சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன். ரத்தப் பிரிவை மாற்றி ஏற்றினால் உயிர் போகுமா… தவறுதலாக இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்போது, எல்லோருக்கும் உயிரிழப்பு ஏற்படுமா… ரத்தப் பிரிவு மாற்றம் குறித்து சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்…
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி
வெவ்வேறு வகையான ரத்தப் பிரிவுகள் இருப்பதையும், அவை மனிதருக்கு மனிதர் வேறுபடுவதையும் நாம் அறிவோம். யாருக்கு, எந்த ரத்தப் பிரிவு இருக்கிறதோ, அது எந்த ரத்தப் பிரிவுடன் பொருந்தும் என்பதற்கேற்பதான் அவருக்கு ரத்தம் ஏற்றுவதோ, அவரிடமிருந்து ரத்த தானம் பெறுவதோ முடிவு செய்யப்படும். இவற்றில் ஓ பாசிட்டிவ் வகை ரத்தப்பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டும் ‘யுனிவர்சல் டோனர்’ (universal donor) என்று சொல்கிறோம்.
எல்லோருக்கும் எல்லாவகை ரத்தப் பிரிவுகளும் ஏற்றுக்கொள்ளாது. அதை இன்காம்பாட்டிபிலிட்டி (Incompatibility) என்று சொல்கிறோம். பெரும்பாலும் இந்தப் பிரச்னை ரத்தம் ஏற்றும்போது வரும்.
பொதுவாக அறுவைசிகிச்சை செய்யும்போதோ, டெலிவரி, விபத்து போன்ற எமர்ஜென்சி சிகிச்சையின்போதோ ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை வரும்.
இது தவிர, அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பில்கூட சிலருக்கு ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை வரும். இது போன்ற தருணங்களில் ‘இம்யூன் ஹீமோலைட்டிக் ரியாக்ஷன்’ ( Immune Hemolytic Reaction) என்ற பிரச்னை வரலாம். அதாவது ஒரு நபருக்கு ரத்தம் ஏற்றும்போது, அது தானம் செய்பவரின் ரத்த செல்களுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கும்.
அதனால் ‘ஹீமோலைசிஸ்’ ( Hemolysis) என்ற பிரச்னை வரலாம். அதாவது ரத்த செல்கள் உடையத் தொடங்கும். அதனால் தலை முதல் கால் வரை பல்வேறு விளைவுகள் ஏற்படலாம். இதை ‘அக்யூட் ஹீமோலைட்டிக் ரியாக்ஷன்’ (acute hemolytic reaction) என்று சொல்வோம்.

அக்யூட் ஹீமோலைட்டிக் ரியாக்ஷன் பாதிப்பானது ரத்தம் ஏற்றிய 24 மணி நேரத்துக்குள் ஏற்படும். சிலருக்கு 6 முதல் 12 மணி நேரத்துக்குள்ளும் வரும். ‘டிலேடு ஹீமோலைட்டிக் ரியாக்ஷன்’ (delayed hemolytic reaction ) என இன்னொரு வகை இருக்கிறது.
இது 24 மணி நேரத்துக்குப் பிறகு 72 மணி நேரத்துக்குள் வரக்கூடியது. எந்த ரத்தப் பிரிவு ஏற்றுக்கொள்ளும் எனத் தெரியாமல் ஒவ்வாத ரத்தப் பிரிவை ஏற்றும்போது இத்தகைய பிரச்னைகள் வரலாம்.
இந்த இணக்கமின்மை பாதிப்பானது சருமத்தில் தடிப்புகள், சுவாசக் கோளாறு, மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்படுவது என பலவித அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். சில அறிகுறிகளுக்கு உடனடியாக அவசர சிகிச்சை கொடுக்காவிட்டால் உயிரே போகும் அபாயம் உண்டு.
இத்தனை பிரச்னைகள் இருப்பதால்தான் இன்று ரத்த மாற்று சிகிச்சை என்பது மருத்துவத்தில் தனிப்பிரிவாகவே இயங்குகிறது. அந்தத் துறையில் அனுபவம் உள்ளவர்கள்தான் இதைப் பார்த்துக்கொள்வார்கள்.
இணக்கமில்லாத ரத்தப்பிரிவு என்றில்லை, இணக்கமுள்ள ரத்தப்பிரிவை ஏற்றும்போதும் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். நீங்கள் கேள்விப்பட்ட செய்தியில் குறிப்பிட்டபடி, அது உயிரிழப்புவரை கொண்டுசெல்லும் அபாயமும் உண்டு. எனவே, ரத்தம் ஏற்றுவதை முறையாக, மிக மிக ஜாக்கிரதையாகச் செய்யாவிட்டால், இதுபோன்ற பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.