
2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – காசா போர் இன்று வரை தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
இதுவரை இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நடந்த மோதல்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் இஸ்ரேல் தான் முதலில் தாக்குதலைத் தொடங்கும். ஆனால், இந்தப் போரின் தொடக்கத்திற்கு காரணம், காசா. ஆம், இந்தப் போரில் முதல் தாக்குதலை மேற்கொண்டது காசா தான். இந்தத் தாக்குதலுக்கு பின்னால், முக்கிய மூளையாக செயல்பட்டவர் யஹ்யா சின்வார்.
இவர் தான் ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பின் அப்போதைய தலைவர். ஆனால், இவர் அதே ஆண்டு அதே மாதம் (2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம்) இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தார். இவருக்கு பின்னால், இவரது சகோதரர் முஹம்மது சின்வார், ஹமாஸ் அமைப்பின் காசா தலைவரானார்.
இப்போது அவரும் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். இதற்கு முன்பே, இந்தச் செய்தி கசிந்திருந்தாலும், அது உறுதிப்படுத்தப்படவில்லை.
நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெதன்யாகு, இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஹமாஸ் தலைவர்களின் பட்டியலை வாசித்தார். அதில் தான் முஹம்மது சின்வார் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆக, அவர் உயிரிழந்தது இஸ்ரேல் பிரதமரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், ஹமாஸ் அமைப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.

“கடந்த இரண்டு தினங்களாக, ஹமாஸ் தோல்வி முகத்திற்கு திரும்பி உள்ளது” என்று நேற்று நெதன்யாகு பேசியுள்ளார். மேலும், பாலஸ்தீனத்தில் உணவு சப்ளையை இஸ்ரேல் கையிலெடுத்துள்ளதாகவும் அறிவித்தார்.
கடந்த சில தினங்களாக, பாலஸ்தீனத்தில் மக்கள் பசியால் பாதித்து வருகிறார்கள் என்று உலக நாடுகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.