
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகிலுள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டர் ஜெகத்குமார். இவரின் மனைவி பிரியா. இவர்களுக்கு நளினி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) உள்பட 2 பிள்ளைகள்.
இந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரணால் பிள்ளைகளையும் பிரிந்து பிரியா சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், புலிவலம் சந்தைமேடு பகுதியில் புதிதாக வீடு கட்டி பிள்ளைகளுடன் வசித்துவந்தார் கார்பென்டர் ஜெகத்குமார்.
கே.ஜி.கண்டிகை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்துவந்த நளினி (வயது 15) நடப்பு கல்வியாண்டில் பதினோராம் வகுப்பு செல்லவிருந்தார். விடுமுறையையொட்டி, ஜெகத்குமாரின் அக்காள் மகள்கள் இருவரும் சென்னையில் இருந்து புலிவலம் கிராமத்துக்கு வந்திருந்தனர்.
நேற்று (28-5-2025) காலை ஜெகத்குமார் வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் மாணவி நளினியுடன் ஊரில் இருந்து வந்திருந்த அவரின் அத்தை மகள்களும் இருந்தனர். மாலை நேரமானது.
ஜெகத்குமார் வீடு திரும்புவதற்கு முன்பாக திடீரென ஒரு இளைஞன் அவரின் வீட்டுக்குள் புகுந்தான். அப்போது, மாணவி நளினியும், அவரின் அத்தை மகளும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். இளைஞனை கண்டதும் இருவரும் அதிர்ச்சியில் பதறிப்போய் கூச்சல் போட்டனர்.
வெறிகொண்ட இளைஞன், நளினி உடன் இருந்த அத்தை மகளை கத்தியால் குத்தி தாக்கி வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்டு, மாணவி நளினியை மட்டும் வீட்டுக்குள் வைத்து உள்புறமாக கதவை பூட்டிக்கொண்டான்.

`என்ன லவ் பண்ண மாட்டியா… எத்தனை முறை உன் பின்னாடி வந்து கெஞ்சுறது…’ என்று திரும்பத் திரும்ப கத்திக்கொண்டே, மாணவி நளினியை கத்தியால் சரமாரியாக குத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
வெளியே தள்ளப்பட்ட சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். வீட்டுக்குள் இருந்தும் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, இரும்பு ராடால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, மாணவி நளினி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ந்துபோயினர்.
ரத்தக்கறைப் படிந்த கத்தியுடன் மாணவியின் சடலம் அருகே நின்றிருந்த இளைஞனை பிடித்து வீட்டுக்கு வெளியே இழுத்துவந்து பொதுமக்கள் தாக்கினர்.
இது குறித்து தகவல் தெரியவந்ததும், கொண்டப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாணவி நளினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொதுமக்களின் பிடியில் இருந்த இளைஞனையும் மீட்டு கைது செய்தனர்.

விசாரணையில் அந்த கொடூரன், திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகைப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 21) எனத் தெரியவந்தது.
கே.ஜி.கண்டிகை பகுதியிலுள்ள தனியார் பள்ளிக்கு மாணவி நளினி தினமும் சென்றுவந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி பின்தொடர்ந்து சென்று லவ் டார்ச்சர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பள்ளி விடுமுறை என்பதால், மாணவியை தேடிவந்து இந்த கொடூரத்தில் அவன் ஈடுபட்டிருப்பதும் முதற்கட்டமாகத் தெரியவந்திருக்கிறது. ஆனாலும், இந்த படுகொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா? என்ற கோணத்திலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.