
சென்னை: சென்னை தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அடுத்த 4 மாதங்களில் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரை ராஜஸ்தானுக்கு இடமாற்றம் செய்யவும், ராஜஸ்தான் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவை சென்னைக்கு இடமாற்றம் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகள் நியமனமும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்த கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் (கே.ஆர்.ஸ்ரீராம்), சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2024 செப்டம்பர் 27-ம் தேதி பொறுப்பேற்றார். இவர் 2025 செப்டம்பர் 27-ம் தேதியுடன் பணிஓய்வு பெற இருந்த நிலையில், இவரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யவும், அங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருப்பது நீதித்துறை வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.