• May 29, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

பள்ளியில் வரலாற்று பாடத்தில் நாகரிகம் தோன்றிய இடங்களை பற்றி படித்ததுண்டு. அவற்றில் எகிப்திய நைல், சுமேரிய, சீன மஞ்சள் ஆறு மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தை படித்த பொழுது எகிப்தின் ஸபினக்ஸ் (Sphinx) மற்றும் ஹரப்பாவின் தி க்ரேட் பாத் (The Great Bath) தான் நம் முன்னே நினைவில் நிற்கும்.

பள்ளி பருவத்தில் இந்த நாகரிகங்கள் பற்றிய பெரிய புரிதலோ, இதற்கு பின் உள்ள அறிவியல் அகழ்வாராயச்சி போன்ற தகவல்களோ தெரியாது.

சிந்து சமவெளி நாகரிகத்தின் இரு பெரும் தொன்மங்களான மொகெஞ்-ஜோ-தரோ மற்றும் ஹரப்பா பாகிஸ்தானில் உள்ளது.

Mohenjo-daro, Pakistan

தமிழகத்தில் நடந்த கீழடி ஆய்வும் அதன் மூலம் வெளிவந்த நாகரிக ஆதாரங்கள் சிந்து சமவெளி நாகரிகத்துடன் ஒப்புமை கொண்டுள்ள என தகவல்களால் சிந்து சமவெளி நாகரிக இடங்களை காண விழைந்து அதற்குரிய தேடுதல் வேட்கையே என் சிந்து சமவெளி நாகரிக சுற்றுலா.

கோவிட் – 19 பெருந்தொற்றுக்கு பின் இயல்பான வாழ்க்கை தொடங்கிய 2021 லிருந்து கிடைத்த விடுமுறையில் இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரிக இடங்களை கண்டு அக்காலச்சக்கரத்திற்குள் பயணம் செய்தேன்.

சிந்து சமவெளி நாகரிகம்

சிந்து சமவெளி நாகரிகத்தின் தொன்மங்கள் இந்தியாவில் நான்கு (4) முக்கிய இடங்களில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தோலாவீர, லோத்தல், சுரகோதாட ஆகிய இடங்கள் குஜராத்திலும் மற்றும் ராக்கிகர்கி தொன்மம் ஹரியானாவிலும் உள்ளன.

பயணத் தகவல்கள்

குஜராத்தில் உள்ள இடங்களை காண்பதற்கு தலை நகர் அஹமதாபாத்திலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து அஹமதாபாத்திற்கு நேரடி விமான மற்றும் தொடர் வண்டி சேவை உள்ளது. இந்த தொன்ம இடங்கள் செல்வதற்கு பொதுப்போக்குவரத்து மிக குறைவு. குழுவாக செல்பவர் மகிழுந்து மூலம் செல்லலாம். தனி நபர் அல்லது இருவராக இருப்பின் தொடர் வண்டி மற்றும் பேருந்து என பயணம் செய்ய வேண்டும்.

தோலாவீர – அஹமதாபாத்திலிருந்து சமகியளி (Samakhiali) வரை தொடர்வண்டி மூலமும் பின்னர் அங்கிருந்து தோலாவீரவிற்கு பேருந்து மூலம் பயணம். அதே பேருந்து மதியம் 12.30 மணிக்கு தோலாவீரவிலிருந்து புறப்படும். தற்போது புஜ் நகரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளன.

தோலாவீரவில் தங்குவதற்கு ஒரே தங்கும் விடுதி உள்ளது. முன் பதிவு அவசியம்.

Lothal

லோதல் – அஹமதாபாத் நகரில் இருந்து 80 கி. மீ தொலைவில் உள்ளது. இரண்டு பேருந்துகள் (அஹமதாபாத் – பகடோரா – லோத்தல்) என மாறி செல்ல வேண்டும்.

சுரகோதட – அஹ்மதாபாத் – புஜ் தொடர் வண்டி தடத்தில் உள்ள அடேசர் என்ற நிலையத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. கிராமப்புற போக்குவரத்து மூலம் இவ்விடத்தை அடையலாம். அஹ்மதாபாத்/புஜ் நகரில் தங்கலாம்.

ராக்கிகர்கி – புது தில்லியிலிருந்து சுமார் 150 கி . மீ தொலைவில் உள்ளது. தொடர்வண்டி /பேருந்து மூலம் செல்லலாம்.

5000 ஆண்டுகளுக்கு முன்னேயே செம்மையான நாகரிக வாழ்வை வாழ்ந்த ஒரு குடியின் நகரத்தை காண சற்று காலச்சக்கரத்தில் பின்னோக்கி பயணிப்போமா

தோலாவீர (Dholavira)

சிந்து சமவெளி நாகரிகத்தின் முதல் தொன்மத்தை அடைந்த பயணமே ஒரு அனுபவம். தில்லியிலிருந்து விமானம் மூலம் அஹமதாபாத் அடைந்து பின்னர் அங்கிருந்து சமகியளி எனும் இடத்திற்கு தொடர்வண்டி மூலம் அதிகாலை வந்து சேர்ந்தேன்.

தொடர்வண்டி நிலையத்தில் பலருக்கு தோலாவீர பற்றிய தகவல் தெரியவில்லை. அதிகாலை நேரமாதலால் பொது மக்கள் நடமாட்டும் குறைவு. ஒரு வழியாக பேருந்து நிலையத்தில் தோலாவீரவிற்கு செல்லும் ஒரே பேருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் என்ற தகவல் கிடைத்தது.

Dholavira, Archaeological site

பேருந்தை எதிர் பார்த்த எனக்கோ அதிர்ச்சி, வந்ததோ சிறிய அளவிளான பேருந்து. இதில் எப்படி 140 கி. மீ. பயணிப்பது? பேருந்து வந்தவுடன் காய்கறி, பழங்கள் மற்றும் பிற பொருட்களோடு 7 மணியளவில் புறப்பட்டது. சமகிளையிலிருந்து புறப்பட்ட பேருந்து தோலாவீர சாலையில் பயணித்தது.

ஒற்றை சாலையில் பயணம், எதிரில் அரிதாக இரு சக்கர மற்றும் சிறு சரக்கு வாகனம். வழியில் உள்ள குக்கிராமங்களில் மனிதர்களோடு பொருட்களும் கோழி ஆட்டுக்குட்டி என பயணம் ஏறுவதும் இறங்குவதும் என தொடார்ந்தது.

சுமார் 2 மணிக்கு மேல் தொடர்ந்த பயணத்தில் நீண்ட கருகூந்தலின் இருபுறமும் நீரும் வெள்ளை மலர்கள் (பனிகட்டியும்) (ஜனவரி 2021) சூழ கட்ச் ஏரியில் பயணம் செய்வது ஒரு அழகிய அனுபவம். சுமார் மதியம் 12 மணியளவில் காடிர் (Khadir) தீவில் அமைத்துள்ள தோலாவீர ஊருக்கு வந்து சேர்ந்தேன். இந்த பேருந்து தான் இப்பகுதி பெரும் நிலப்பகுதியை இணைக்கும் ஒரே நண்பன்.

Dholavira

அச்சமயத்தில், தோலாவீர டூரிஸம் ரிசார்ட் (Dholavira Tourism Resort) தான் ஒரே ஒரு தங்கும் விடுதி. மதிய உணவிற்கு பின் தோலாவீர தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு சென்றேன். தோலாவீர கால வரலாறு, நகர அமைப்பு, அகழாய்வில் கிடைத்த மட்பாண்டகள், உழவு பொருட்கள், வீட்டு பொருட்கள், எடை கற்கள், முத்திரைகள், சின்னங்கள், விளையாட்டு பொருட்கள் என அறிய தகவல்களுடன் அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தோலாவீர புரதான நகருக்குள் செல்லும் முன் இதைப் பார்ப்பது சிறப்பு.

தோலாவீர நகரம் மனஹர் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. நாகரிகத்தின் சாட்சியாக இருக்கும் வறண்ட மனஹர் ஆற்றை கடந்து நகருக்குள் செல்வோம். தோலாவீரவில் நகரம் கோட்டை (Citadel), நடுத்தர (Middle Town) மற்றும் தொழிலாளர் (Lower Town) என மூன்று பகுதிகளில் மக்கள் வாழ்ந்துள்ளனர். இந்தப் பாகுபாடு பொருளாதார/தொழில் சார்ந்த பிரிவுகளாக இருக்கலாம்.

மூன்று வாழ்விடங்ககளும் செவ்வக/நீள் செவ்வக வடிவில் வடிமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி நிலமைப்பியில் (Geology) கிடைக்கும் மணற்கற்களால் (Sandstone) நகரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்லாயிர ஆண்டுகளுக்கு பின் இவை நிலைத்திருக்க இதுவும் ஒரு காரணம்.

பல விதமான குடியிருப்பு பகுதிகள், பொது பாதை, கீழ் தளங்கள் வருவதற்கு படிக்கட்டு, கோட்டையின் நான்கு புறம் வாயில்கள் என நகரம் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நீர் தேக்கம், கிணறு, நீர் குழாய்கள், கழிவு நீர் வெளியேற்ற குழாய்கள், நீர் தேக்கத்திற்கு செல்லும் மழை நீர் சேகரிப்பு பாதை என நீர் மற்றும் நகர் மேலாண்மை சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ளது.

நகரின் வெளிப்புறத்தில் இடுகாடு , கனிம உருக்கும் தொழிற்சாலை என ஒரு நகரம் உயிர்ப்போடு இருப்பதற்கு தேவையான பல கட்டுமானங்கள் உள்ளது. அக்கால மக்களின் கேளிக்கைக்காக திடலும் அரங்கமும் கோட்டை மற்றும் நடுத்தர குடியிருப்பு மத்தியில் அமைந்துள்ளது. நேரம் காட்டும் தூண், குளியறை, வழிபாட்டு இடம் (?) என பல அமைந்துள்ளன.

தற்போது பல நகரங்களில் கிராமங்களில் இல்லாத நீர் மேலாண்மை நகர கட்டமைப்பு சுமார் 3500 – 5000 கி. மு விற்கு முன் மக்கள் சிறப்பான நாகரிக வாழ்வை வாழ்ந்துள்ளனர். இந்த அகழ்வாய்வு இடம் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. .

Fossil Park

படிமப் பூங்கா (Fossil Park)

தோலாவீர நாகரிகம் 3500 -5000 கி. மு காலத்தை சேர்ந்தது என்றால் இப்போ நாம் காண்பது சுமார் ஜூராசிக் (Jurassic) (150 – 200 மில்லியன் ஆண்டுகள்) காலத்தை சேர்ந்த மரங்கள் மண் துகள்காள் நிறைந்து பாறையான படிமங்கள், கட்ச் ஏரி கரையில் இந்திய புவிமைப்பியல் துறையால் (Geological Survey of India) அமைக்கப்பட்டுள்ளது.

சூரியன் மறைவு

தோலாவீரவில் மாலை கட்ச் ஏரி பின்புலத்தில் சூரியன் மறைவு காட்சியும் பறவைகள் கூட்டமாக கூடு திரும்பும் காட்சியும் ஒரு அழகியல்.

பெரும் பூநாரை (Greater Flamingo)

தோலாவீரவில் உள்ள நீர் நிலைகளில் இனப் பெருகத்திற்காக பல்வகை பூநாரை கூட்டம் வடக்கே சைபேரியவிலிருந்து குளிர் காலத்தில் வருகின்றன. இளங்காலை பொழுதில் பெரும் பூநாரை கூட்டம் குளத்தில் மீன் பிடிப்பதும், வட்டமிட்டு பறப்பது, காதல் இணையுடன் நீந்துவது, கூட்டமாக பெரும் ஓசை எழுப்பவது என அழகிய காலைத் தருணம் தவற விடாதீற்கள்.

தோலாவீர – இயற்கையின் அழகியலோடு கூடிய அருமையான நாகரிக தொன்மம். இங்கு செல்வதற்கு டிசம்பர் – ஜனவரி ஏற்ற காலம். ஒரு நாள் இரவு தொலைத்தொடர்பு சாதனமின்றி வானில் உள்ள நட்சத்திர கூட்டத்தை ரசிச்தபடி உறங்க செல்லுங்கள் . தோலாவீர நாகரிக மக்கள் உங்கள் கனவுகளில் வந்து தங்களுடைய அமைதியான அழகிய நகரத்தை சுற்றி காட்டலாம். யாருக்கு தெரியும் நீங்களும் அம்மக்களின் ஒருவராக வாழ்ந்து இருக்கலாம்.

லோதல் (Lothal)

பகோகோவ நதிக்கரையில் அமைந்த லோதல் சுமார் 2500 – 1900 கிமு விற்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தது. இதுவும் கோட்டை மற்றும் தொழிலாளர் குடியிருப்பு என இருபகுதிகளை கொண்டது. தோலாவீரவில் உள்ளதைப் போல் நீர் மேலாண்மை சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுட்ட செங்கற்களால் நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கனிம தொழிற்சாலையும் உள்ளது. அக்காலத்தில் பயன்படுத்திய நீர் தேக்கம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது அவர்களுடைய நீர் மேலாண்மைக்கு ஒரு மகுடம் அகழ்வாய்வு மூலம் கிடைத்த பொருட்களின் மூலம் இது ஒரு முக்கிய துறைமுக நகரமாக அக்காலத்தில் விளங்கியுள்ளது. தற்போதும் இந்த நதியில் படகு போக்குவரத்து செய்யப்படுகின்றது. இந்த அகழ்வாய்வு இடம் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது.

சுரகோதட (Surkotada)

சென்ற ஆண்டு (2024) குளிர் கால விடுமுறையை குசராத் கடற்கரை அருகில் உள்ள சுற்றுலா தளங்களை காண தகவல்கள் திரட்டும்போது சிந்து சமவெளி நாகரிக தொன்மம் “சுரகோதட” கண்ணில் பட்டது. ஏற்கனவே தோலாவீர, லோதல் தளங்களை கண்ட எனக்கு ஆர்வமுடன் பயண அட்டவணையில் இணைத்து கொண்டேன்.

புஜ் – அஹ்மதாபாத் தொடர் வண்டி ரத்து ஆனதால், பேருந்து பயணத்தில் அடேசர் சென்றேன். அடேசரில் சுரகோதட இடத்தை பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. இடத்தை பற்றிய திசை காட்டி, அறிவிப்பு பலகை கூட இல்லை. கூகிள் வரைப்பட வழிகாட்டி துணையுடன் கிராமப்புற போக்குவரத்து மூலம் நக்தார் தாம் (Nakhthar Dham) கிராமத்தின் சாலை சந்திப்பில் இறங்கி பின்னர் 2-3 கி. மீ நடையில் சுரகோதட அடைந்தேன்.

சுரகோதட அகழ்வாய்வு இடத்தை கண்ட எனக்கு பெரும் அதிர்ச்சி. சுற்றிலும் இரும்பு வேலி அமைக்கப்பட்டு இரும்பு கதவு வைக்கப்பட்டுள்ளது. எதிரில் உள்ள வீட்டினர் இந்த இடத்தை எருமை தொழுவமாக பயன்படுத்துவதால் வாசல் திறந்திருந்தது. அகழ்வாய்வு பற்றிய தகவல் பலகை என ஒன்றுமில்லை.

திறந்திருந்த துரு பிடித்த இரும்பு கதவின் வழியே முட்செடிகள் சூழ நாகரிகம் செழித்த இடம் கண் முன்னே தெரிந்தது. தோலாவீரப் போல் இங்கேயும். சமதளத்திலிருந்து சற்று உயர்வான பகுதியில் மணக்கற்களால் நகரம் அமைக்கபட்டுள்ளது. சுமார் 50 மீ நீளமும் 10 மீ அகலமும் கொண்ட இப்பகுதி சீரான நகரமைப்பு கொண்ட கட்டிடங்கள் இருந்ததற்கான அறிகுறி இருந்தது. இவை தவிர வேறு ஏதும் காணவில்லை.

கீழடி

வட இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரிக தளங்களை கண்டபின் அக்டோபர் 2022 கீழடி அகழாய்வு பகுதியை கண்டேன். அப்போது பொருநை அருங்காட்சியக பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அகழ்வாய்வு குழிகளில் கிடைத்த மட்பாண்டம், உரை கிணறு/சேமிப்பு கிடங்கு போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இன்றையை அறிவியல் தொழில்நுட்ப, கட்டிடக்கலை வளர்ச்சி பற்றி வியக்கும் நாம் 5000 ஆண்டுகளுக்கு முன்னே நகர கட்டமைப்பு, நீர் மேலாண்மை , கனிம உபயோகம், பிற சமகால நாகரிகத்துடன் வணிக தொடர்பு என ஒரு சமூகம் வாழ்ந்த தொன்ம சான்றுகளை காண செல்லுங்கள்.

தொல்துறையும் சுற்றுலா துறையும் சிந்துசமவெளி நாகரிக அகழ்வாய்வு இடங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இவ்விடங்கள் பற்றிய தகவல்களை மாநில/ மாவட்ட தலைநகரின் விமான/தொடர் வண்டி/பேருந்து நிலையங்களில் வைக்க வேண்டும்.

ஒரு வேண்டுகோள் – சுற்றுலா செல்லும் இடங்களில் கூடுமானவரை அசுத்தம் செய்யாமல் தூய்மையை கடைப்பிடித்தால் சிறப்பு.

-தி பெருமாள்

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *