• May 28, 2025
  • NewsEditor
  • 0

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாள்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில் அதிதீவிர கனமழை இருக்கும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊட்டியில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு, “‌ அடுத்த இரண்டு நாள்கள் நீலகிரி மாவட்டத்திற்கு மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மரங்கள் விழும் அபாயமும் உள்ளது.

ஊட்டி -கூடலூர் சாலை

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் நடுவட்டம் அருகே ஆகாச பாலம் – தவளை மலை இடையே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள மூன்று ராட்சத பாறைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் இவ்வழித்தடத்தில் வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகள்‌ பகல் நேரங்களில் மட்டும் இயக்கப்பட உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படும். அவசர தேவைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை வாகனங்கள் மட்டும் பாதுகாப்புடன் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் உள்ளூர் வாகனங்கள் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் அனுமதிக்கப்படும். அடுத்த இரு நாள்கள் கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன.

ஊட்டி -கூடலூர் சாலை

அடுத்த இரு நாள்கள் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம். பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். ஊட்டி – கூடலூர் சாலையில், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதியில் ஆர்.டி.ஓ தலைமையில் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அங்கு பணியில் உள்ளனர். நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி வாகனங்களை வைத்து நிலச்சரிவு ஏற்பட்டால் உடனுக்குடன் அகற்ற தயார் நிலையில் உள்ளனர்.

இது அனைத்துமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மழை பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், பொதுமக்கள் உடனுக்குடன் 1077 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் அண்டை மாநிலங்களில் உள்ள கலெக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க அறிவுரை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி -கூடலூர் சாலை

அதேபோல் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களிலும் இது குறித்து தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கூடலூர், கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தற்போதைக்கு முதுமலை, மசினகுடி சாலையில் ஊட்டி வர பயன்படுத்தலாம். மேலும் ஏற்கனவே, ஊட்டி – கூடலூர் வழித்தடத்தில் உள்ள ஃபைன் பாரஸ்ட், பைக்காரா, சூட்டிங் மட்டம் ஆகிய சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அடுத்த இரு நாள்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ” கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *