
மதுரை: “அமலாக்கத் துறை சோதனைக்கு பயமில்லை என்றால் நண்பர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியது ஏன்?” என துணை முதல்வர் உதயநிதிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது: “பாஜக – அதிமுக கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம் வந்திருப்பது உண்மை. பிரதமர் மோடிக்கும் பயப்படமாட்டேன், ஈ.டி-க்கும் பயப்படமாட்டேன் என துணை முதல்வர் உதயநிதி தெடார்ந்து பேசி வருகிறார். திமுகவினரும் அப்படியே பேசி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2011-ல் மார்ச் மாதம் அமலாக்கத் துறை சோதனையை வைத்து மிரட்டி தான் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அப்போது உதயநிதி அரசியலுக்கு வரவில்லை. அப்போது இருந்தே உதயநிதிக்கு அமலாக்கத் துறை மேல் பயம் உள்ளது.