
கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பது, தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்த விஷயத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அதெல்லாம் கமல்ஹாசனுக்கு தெரியாது. வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.” என தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.
மேலும், கர்நாடகாவிலுள்ள எதிர்க்கட்சியான பா.ஜ.க உட்பட கன்னட அமைப்புகள் கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான தொல். திருமாவளவன் இந்த விவகாரத்தில், “வரலாற்று மொழியியல் வல்லுநர்கள் தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
பல மொழியியல் அறிஞர்கள் அதைப் பல்வேறு தளங்களில் பதிவு செய்துள்ளனர். இன்றைக்கு கன்னடம், மலையாளம் பேசக்கூடிய மக்கள் அந்த உண்மையை ஏற்கத் தயங்கலாம்.
ஆனால், வரலாறு வரலாறுதான், உண்மை உண்மைதான். அதை எவரும் மறுக்க முடியாது.

கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்திலும் அந்த உண்மை சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே தமிழிலிருந்து பிற மொழிகள் சம்ஸ்கிருத கலப்பால் உருவாகியிருக்கின்றன என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்று உண்மை.” என்று கூறினார்.