
நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்துப் பேசிய கருத்துகள், பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், மன்னிப்புக் கேட்க முடியாது எனக் கூறியுள்ளார்.
தக் லைஃப் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், நடிகர் சிவராஜ் குமார் குறித்துப் பேசுகையில், “சிவராஜ் குமார் மற்றொரு மாநிலத்தில் வாழும் என்னுடைய குடும்பம். அதனால்தான், உயிரே உறவே தமிழே என என் பேச்சைத் தொடங்கினேன். உங்கள் (சிவராஜ் குமார்) பாஷை தமிழிலிருந்து வந்தது, எனவே முதல் வரி உங்களையும் சேர்த்தது” எனப் பேசியிருந்தார்.
கமல்ஹாசன் கருத்துக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா, “கமல் மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், அவரது படத்தை திரையிட விடமாட்டோம்.” எனத் தெரிவித்திருந்தார்.
இதே கருத்தை காங்கிரஸைச் சேர்ந்த கர்நாடகா அமைச்சரும் பேசியிருந்தார். முதலமைச்சர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அதெல்லாம் கமல் ஹாசனுக்குத் தெரியாது. வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.” எனப் பேசியிருந்தார்.
Kamal Haasan விளக்கம்!
இந்த நிலையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கமளித்துள்ளார் கமல்ஹாசன்.

“அரசியல்வாதிகளுக்கு மொழியைப் பற்றி பேசும் கல்வி தகுதி கிடையாது. என்னையும் சேர்த்துதான். எனவே இந்த ஆழமான விவகாரங்களை வரலாற்றாசிரியர்கள், மொழியியல் வல்லுநர்கள், அகழாய்வாளர்களிடம் விட்டுவிடலாம்.
நான் சிவாண்ணாவிடம் அன்பின் அடிப்படையில் பேசினேன். நாங்கள் ஒரு குடும்பம். மொழிகளும் அப்படியே.
நீங்கள் வடக்கில் இருந்து பார்த்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் தென் குமரியில் இருந்து பார்த்தால், நான் சொல்வதே சரி. இதற்கு மூன்றாவது கோணமும் இருக்கலாம். அதை நான் சொன்னதுபோல வல்லுநர்களிடம் விட்டுவிடலாம்.
குடும்பத்துடன் இருக்க வேண்டுமா, வடக்கில் இருந்து வந்த மொழியை ஏற்க வேண்டுமா என்பதை அவர்களே சொல்லட்டும்.” எனப் பேசினார் கமல்ஹாசன்.
மேலும் அவர், “இது ஒரு பதில் அல்ல, விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்புக் கேட்காது” எனப் பேசினார்.