
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.
இக்கோயிலில், தெய்வானை என்ற 26 வயதான பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
திருக்கோயில் நிர்வாக நிதி மட்டுமின்றி, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள யானை பராமரிப்பு உண்டியல்கள் மூலம் கிடைக்கப் பெறும் பக்தர்களின் காணிக்கைகள் மூலமும் தெய்வானை யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
தினமும் காலை, மாலை வேளைகளில் தெய்வானை யானை கோயில் வெளிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.
அதேபோல முக்கிய விசேஷ நாள்களிலும், விரத நாள்களிலும் ரத வீதிகளில் சுற்றி வருவது வழக்கம்.
திருக்கோயில் அருகிலுள்ள சரவணப் பொய்கையில் ஷவர் வசதியுடன் கூடிய பிரம்மாண்ட நீச்சல் குளம் தெய்வானை யானைக்காகக் கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்டது.
இந்த நீச்சல் குளத்தில்தான் தினமும் தெய்வானை உற்சாகக் குளியல் போட்டு அலங்கரிக்கப்பட்டு, கோயிலுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம்.
இக்கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சுவாமியைத் தரிசனம் செய்யும் முன்போ தரிசனம் செய்த பின்போ தெய்வானையிடம் ஆசி வாங்காமல் செல்வதில்லை.

இந்த யானை, கால்நடை மருத்துவர்களாலும், வனத்துறை அலுவலர்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கோடை வெப்பத்திலிருந்து காத்துக் கொள்வதற்காகத் திருக்கோயில் அருகில் உள்ள சரவணப் பொய்கையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நீச்சல் குளத்துடன் கூடிய ஷவரில் காலை மற்றும் மாலை குளிப்பாட்டி திருக்கோயில் பிரகாரத்தில் நடைப்பயிற்சிக்கு அழைத்து வரப்படுகிறது.
தற்போது கோடையை முன்னிட்டு தர்பூசணி, கரும்பு, முளைக்கட்டிய தானியங்கள், கீரைகள், தென்னம்பூ, காய்கறிகள், பழங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
தற்போது பனை சீசன் என்பதால், திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனை சார் பிரதான உற்பத்தி பொருட்களில் ஒன்றான பனை கிழங்குகளைப் பக்தர்கள், தெய்வானைக்கு உண்பதற்காகக் கொடுக்கின்றனர்.
பனங்கிழங்குகளைத் துதிக்கையால் பெற்றுக்கொண்டு, பற்களால் கடித்து பனங்கிழங்கின் நடுவில் உள்ள பீலியை நீக்கிவிட்டு மனிதர்கள் உண்பதுபோலவே உண்ணுகிறது.

இதனைப் பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பனங்கிழங்கைப் பற்றி அறியாத வெளி மாவட்ட பக்தர்கள் பனங்கிழங்கினைக் கடித்து பீலியை நீக்கிவிட்டு உண்பதை வீடியோவாகவும் எடுத்துச் செல்கின்றனர்.
சுமார் 10 அடி நீளமுள்ள தென்னை கீற்றை அப்படியே தின்னும் இந்த யானை சிறிய பனங்கிழங்கில் உள்ள பீலியையும், தோல் பகுதியையும் நீக்கிவிட்டு உண்ணுவது போல உண்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY