
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட பெயர் ‘வேடன்’. கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள்தான் சமீபநாட்களாக ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் இடம்பெறுபவை. புரட்சிகரமான பாடல் வரிகள் மூலம் கவனம் பெற்ற இந்த வேடன் யார்? அவரது பின்னணி என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
வேடன் என்ற மேடைப் பெயரால் பிரபலமாக அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, கேரளாவின் திருச்சூரில் பிறந்தவர். 2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் காலகட்டத்தில் ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தனது முதல் இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டு புகழ் பெற்றார். இந்தப் பாடல் தீயாய் பரவி அவரை பிரபலமாக்கியது. சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் இடம்பெற்ற வரிகள் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.