
ஆந்திரா மாநிலத்தை ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தின் மூன்று நாள் மாநாடு நேற்று கடப்பாவில் தொடங்கியது. அப்போது பேசிய ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு…
ரூபாய் நோட்டுகள் வேண்டாம்!
“இப்போது நம்மிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி உள்ளது. அதனால், ரூ.500, ரூ.1,000, ரூ.2,000 போன்ற பெரிய தொகை கொண்ட பண நோட்டுகள் நமக்கு வேண்டாம். அப்போது தான் நாட்டில் இருந்து ஊழலை அழிக்க முடியும்.
ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை அழிக்கச் சொல்லி முதலில் குரல் கொடுத்தது நானே. இப்போது ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை கொண்டு வந்துள்ளனர். அதையும் அழிக்க வேண்டும்.
பண மதிப்பிழப்பிற்கு பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, அவர்கள் புதிய பண நோட்டுகளை வழங்கி வருகிறார்கள்.
ஊழல்கள்…
அரசியலில் நடக்கும் ஊழல்களை மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது கட்டுக்கதை. தெலுங்கு தேசக் கட்சி தொடர்ந்து ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிறது. மேலும், பல லட்ச கோடி ஊழல்களை நம் கட்சி சி.பி.ஐ போல வெளி கொண்டு வந்துள்ளது.

நாம் என்ன நினைக்கிறோமோ…
‘ஆந்திரா இன்று என்ன யோசிக்கிறதோ, அதை நாளை இந்தியா யோசிக்கும்’ என்பது பல முறை நிரூபணமாகி உள்ளது. இந்தியாவில் முன்னோடி நிர்வாக மாதிரிகளான மின் சீர்திருத்தங்கள், பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் நிர்வாக பொறுப்புக்கூறலை நாம் தான் அறிமுகப்படுத்தினோம்” என்று பேசியுள்ளார்.