
பிரபல மலையாள நடிகரான உன்னி முகுந்தன், தமிழில் ‘சீடன்’, ‘கருடன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருடைய மேலாளராக இருந்தவர் விபின் குமார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைக் கண்டு கோபமடைந்த உன்னி முகுந்தன், அவரைத் தாக்கியதாக காக்கநாடு இன்ஃபோபார்க் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “உன்னி முகுந்தனிடம் 6 ஆண்டுகளாக பணியாற்றினேன். ‘மார்கோ’ படத்துக்குப் பிறகு அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் விரக்தியில் இருந்தார். டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி முகநூலில் குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்ததும் ‘இனி நீ எனக்கு மேலாளராக இருக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுத் தாக்கினார். கடுமையான வார்த்தைகளைச் சொல்லித் திட்டினார். அதற்காகப் புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.