
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்தும் இங்குச் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனிடையே பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த மே 20-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். மூதாட்டியின் உடலைப் பெறுவதற்காக அவரின் மகள் செல்வி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அவர் அம்மாவின் கழுத்திலிருந்த ரூ. 40,000 மதிப்பிலான தாலி சங்கிலி மற்றும் தங்கக் காசுகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

செல்வியின் கணவர் காவல்துறை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் செல்வி புகார் அளித்திருந்தார்.
செல்வியின் புகார் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

அவர் தான் மூதாட்டியின் கழுத்திலிருந்த தாலியைத் திருடினார் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY