• May 27, 2025
  • NewsEditor
  • 0

கோவை, நீலகிரி போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. மழைக்காலம் என்பதால் காட்டில் இருக்கும் பாம்பு, பூரான் என விஷ ஜந்துக்களெல்லாம் முன்னெச்சரிக்கையாக இல்லையெனில் வீட்டிற்குள்ளேயே நுழைந்துவிடும். அல்லது வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக், கார் போன்றவற்றிலும் நுழைந்து விடும். அதனை கவனிக்காமல் ஓட்டிச் சென்றால் ஆபத்து நமக்குத்தான்.

பாம்பு

சமீபத்தில் ஆவடியிலும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. டூ வீலரில் மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு கடித்து 20 வயது இளைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதில், பைக்கில் மறைந்திருந்த பாம்பைப் பார்த்து, பைக்கை ஓட்டியவர் ஹேண்டில்பாரில் இருந்து கையை எடுத்துவிட்டார். வண்டி கீழே சாய்ந்துவிடக்கூடாது என பின்னால் உட்கார்ந்திருந்த இளைஞர் ஹேண்டில்பாரை பிடிக்க, பாம்பு கடித்துவிட்டது. இதனால் அந்த இளைஞர் உயிரிழந்தார்.

இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கு காரணம் வேலைப்பளு, நேரமின்மை போன்ற காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வண்டியை எடுக்கும்போது அதில் ஏதும் விஷப்பூச்சிகள் இருக்கிறதா என்பதைப் பார்க்க தவறிவிடுவதே ஆகும்.

டூ வீலரில் பதுங்கும் பாம்புகள், விஷப்பூச்சிகள்
டூ வீலரில் பதுங்கும் பாம்புகள், விஷப்பூச்சிகள்

வீடுகளில் வாகனங்களை நிறுத்துகிறோம். மறுநாள் அவசர அவசரமாக அதில் ஏறி உட்கார்ந்து கிளம்பி விடுகிறோம். அப்படி செய்யாமல் ஒரு சில நிமிடங்கள் நிதானித்து அந்த வண்டியை ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலேட்டரை இரண்டு, மூன்று முறை முறுக்கினாலே, உள்ளே ஏதேனும் உயிரினங்கள் பதுங்கி இருந்தால் அவை வெளியே வந்துவிடும். நேரத்துக்கு செல்ல வேண்டும் என்பதைவிட நமது உயிர் முக்கியமல்லவா..? அதனால், கொஞ்ச நேரத்தை ஒதுக்கி வண்டிக்குள் ஏதேனும் விஷப்பூச்சிகள் இருக்கின்றனவா என்பதை பார்ப்பது நல்லது.

அப்படியே‌ பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை விளக்குகிறார் அவசர‌ மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர். வி.பி.சந்திரசேகரன்.

குளவி
குளவி

ஒருசில பாம்புக்கடிகளே உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். பாம்பு கடித்துவிட்டால், முதலில் நாம்‌ பதற்றப்படக்கூடாது. கூடவே ஓடுவது, நடப்பது போன்ற வேகமான செயல்களை செய்யவே கூடாது. காரணம் நாம் பதற்றப்படும்போதும், வேகமான அசைவுகளை செய்யும்போதும் ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வெகு விரைவில் உடலில் பரவக்கூடும்.

அருகில் இருக்கும் யாரையாவது உதவிக்கு அழைக்க வேண்டும். உடனே பாம்பு கடித்த இடத்தில் இருந்து ஆறு இன்ச் தொலைவிற்கு சற்று மேல் பகுதியில் ரிப்பனாலோ, கயிற்றாலோ லேசாக இறுக்கிக்கட்ட வேண்டும். பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலமோ, தாங்களாகவோ அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து விஷத்தன்மைக்கு ஏற்ப விஷமுறிவு மருந்தைக் கொடுப்பார்கள்.

சிலர் அவர்களாகவே அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு சென்று ஆன்டிபயாட்டிக் மருந்து எடுத்துக்கொள்வார்கள். என்ன பூச்சிக் கடித்தது; அதன் விஷத்தின் வீரியம் தெரியாமல் ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொள்வது மிகவும் தவறு.

பாம்பு கடித்தால் விஷத்தை எடுக்கிறேன் என வாய் வைத்து உறிஞ்சுவது போன்றெல்லாம் சிலர் செய்கிறார்கள். அப்படியெல்லாம்‌ செய்யவே கூடாது. அது பிரச்னையை இன்னும் அதிகமாக்கும். பாம்பினை அடிக்கவோ அல்லது பிடிக்கவோ முயற்சிக்க வேண்டாம். எந்த பாம்பு கடித்தாலும் சரி, எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்கிறோமோ அவ்வளவு நல்லது. காலதாமதம் தான் ஆபத்தானது. சிறு சிறு கிராமங்களில்கூட தமிழக அரசு சிறப்பான முறையில் ஆரம்ப சுகாதார நிலையங்களை நடத்தி வருகிறது. அங்கு பாம்பு கடிக்கான எதிர்ப்பு மருந்துகள் எப்போதும் இருக்கும்.

குளவி, தேனீ போன்ற பூச்சிகள் கொட்டிவிட்டால் அந்த இடத்தில் சுண்ணாம்பு வைக்க வேண்டாம். குளவி கொட்டினால் அதன் கொடுக்கு உடலில் மாட்டிக்கொள்ளும். அதனை கையால் எடுக்கிறேன் என அழுத்தினால் நஞ்சு உடலுக்குள் சென்றுவிடும். அப்படி செய்யாமல் ஸ்கேல் போன்ற ஒன்றை எடுத்து அதனை மெதுவாக முன்னும் பின்னும் அசைத்தாலே அவை முழுவதுமாக வெளியே வந்துவிடும்.

டாக்டர் சந்திரசேகரன்‌
டாக்டர் சந்திரசேகரன்‌

சிலர் அவர்களாகவே அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு சென்று ஆன்டிபயாட்டிக் மருந்து எடுத்துக்கொள்வார்கள். என்ன பூச்சிக் கடித்தது; அதன் விஷத்தின் வீரியம் தெரியாமல் ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொள்வது மிகவும் தவறு.

ஒரு சில நேரங்களில் விஷம் ரத்தத்தில் கலந்து தீவிர ஒவ்வாமை (Anaphylaxis) ஏற்படுத்தும். இதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுவிட சிரமப்படலாம், மயக்கமடைந்து விடலாம், அதிக வியர்வை ஏற்படலாம். அப்போது ரத்த அழுத்தம் குறைவாகும். இது உயிருக்குக்கூட ஆபத்தை விளைவிக்கலாம். இதற்கு Adrenaline/ Epinephrine என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் குணமடையலாம். பூச்சிதானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்” என்கிறார் டாக்டர் சந்திரசேகரன்‌.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *