
தற்போது முன்னணி நடிகராக அடுத்தடுத்த படங்களின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார் சூரி. அவரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘மாமன்’ திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
உறவுச் சிக்கலைப் பேசும் இப்படத்தின் கதாசிரியரும் சூரியே. தற்போது ‘மாமன்’ படத்தின் வெற்றி குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் சூரி.
அந்தப் பதிவில் அவர், “உண்மையான வெற்றி என்றால்… உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மனதார மதிப்பளிப்பதில் தான் ஆரம்பமாகிறது.
அந்த நம்பிக்கையோடு ‘மாமன்’ கதையை நான் தொடங்கினேன்.
‘மாமன்’ என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவி உருவாக்கப்பட்டது. ஆனால், நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் உணர்வுப்பூர்வமான பயணம் இது.
இந்த உணர்வுகளை என் இயக்குநர் மிக நுட்பமாக உணர்ந்து, ஆழ்ந்த அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்புடனும் எடுத்துக்கொண்டு, அதை உயிரோட்டமுள்ள திரைப்படமாக மாற்றியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் பயணத்தில், ஒவ்வொரு நடிகரும் தங்களது கதாபாத்திரங்களை மனதார உணர்ந்து, உயிரோட்டத்துடன் அரங்கேற்றினர்.
அதேபோல், ஒளிப்பதிவு, இசை, தொகுப்பு, ஒலி, கலைத்துறை, உடை வடிவமைப்பு, நடனம், சண்டை இயக்கம், எழுத்து, தயாரிப்பு நிர்வாகம், வாகன வசதி என ஒவ்வொரு தொழில்நுட்பக் குழுவும் தங்களின் முழு அர்ப்பணிப்புடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றினர்.

அவர்களின் அயராத உழைப்பும் நேர்த்தியும் தான் ‘மாமன்’ இன்று உங்கள் இதயங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கிய காரணம்.
இன்று ‘மாமன்’ திரைப்படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்திலும் ஓடிக்கொண்டிருக்கிறது… ஆனால், அது திரையில் மட்டும் ஒலிப்பதல்ல, நீங்கள் அளித்த அன்பிலும், பாராட்டிலும், உற்சாகமான புன்னகைகளிலும், ஒவ்வொரு குடும்பத்தின் உள்ளத்திலும் அது வாழ்கிறது.
உங்கள் அன்பும் ஆதரவும் தான் எனக்கு உண்மையான வெற்றியும் மகிழ்ச்சியும். ‘மாமன்’ படத்தை உங்கள் குடும்பத்தோடு இணைந்து ரசித்து, உள்ளத்தோடு ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியும் வாழ்த்துகளும்!” எனப் பதிவிட்டுள்ளார்.