
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அவரது வீட்டிற்கு மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் உள்ள அவரது உறவினரான ஜெயபாண்டி என்பவரின் மனைவி வெண்ணிலா, அவரது மகள்கள் ஏஞ்சல் ஆராதியா, ஆசினியா ஆகியோர் கடந்த 22-ம் தேதி வந்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்களை மீண்டும் டி.கல்லுப்பட்டியிலுள்ள அவர்களது வீட்டில் விடுவதற்காக வழக்கறிஞர் பரமசிவம், மூன்று பேரையும் தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
கோவில்பட்டி – பசுவந்தனை சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த டேங்கர் லாரி பைக் மீது மோதியது. இதில் 9 வயதான சிறுமி ஏஞ்சல் ஆராதியா டேங்கர் லாரிக்குள் விழுந்து விட்டார்.
லாரியின் டயர் ஏறி சிறுமி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பரமசிவம், வெண்ணிலா, அவரது இளைய மகள் ஆசினியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து தொடர்பாக டேங்கர் லாரியின் டிரைவர் சிவந்திபட்டியைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து சமூக ஆர்வலர்கள் பேசும்போது, ”பசுவந்தனை சாலை பகுதியில் சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இருப்பது மட்டுமின்றி, சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆக்கிரமிப்புகளால் போதிய இடைவெளி இல்லாததால்தான் பைக் மீது டேங்கர் லாரி மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.