
ஹைதராபாத் vs கொல்கத்தா ஐபிஎல் நேற்று (மே 25) நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி கிளாசனின் சதம் மற்றும் ஹெட்டின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 18.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் இந்த சீசனை நிறைவு செய்தது ஹைதராபாத். ஆட்ட நாயகன் விருதை சதமடித்த கிளாசன் வென்றார்.
தோல்விக்குப் பின்னர் பேசிய கொல்கத்தா கேப்டன் ரஹானே, “அவர்கள் உண்மையில் நன்றாக பேட்டிங் ஆடினார்கள். மோசமான பந்துகளை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து பந்துகளையும் அடித்தார்கள்.
அவர்களின் இன்டென்ட் அபாரமாக இருந்தது. கிரெடிட்ஸ் எல்லாம் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களுக்குத்தான்.
ஸ்லோவர் பால்ஸ், வைடர் பால்ஸ், வைட் ஸ்லோவர் பால்ஸ் என்று நிறைய டிஸ்கஸ் செய்தோம்.
ஆனால், கிளாசன் போன்ற பேட்ஸ்மேன்கள் ஏன் ஹைதராபாத்தின் அனைத்து பேட்ஸ்மேன்களும் நன்றாக ஆடினார்கள்.

ஒரு பவுலிங் யூனிட்டாக இன்னிங்ஸ் முழுக்க நிறைய தவறுகள் செய்தோம். சீசன் முழுக்க எங்களுக்கான தருணங்கள், வாய்ப்புகள், 2, 3 நெருக்கமான போட்டிகள் இருந்தன.
ஆனால், ஒரு அணியாக சரியாக விளையாடவில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும், இவையனைத்தையும் தாண்டி, எங்களால் முடிந்ததை நாங்கள் முயற்சி செய்தோம்.
இது மாதிரி ஒரு ஃபார்மட்ல, ஒவ்வொரு தடவையும் உங்களை ஸ்விட்ச் ஆன் பண்ண வேண்டியிருக்கும்.

இந்த ஐ.பி.எல் ரொம்ப கஷ்டம். ஒரு அணியாக எங்களுக்கான வாய்ப்புகளும், அதற்கான தருணங்களும் இருந்தன.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் கூட இருந்திருப்போம். ஆனாலும், வருத்தம் எதுவும் இல்லை.
இந்த சீசனில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அடுத்த ஆண்டு நாங்கள் மிகவும் வலுவாக மீண்டு வருவோம்.